கோடை காலத்தில் மண்பானை நீர் ஏன் ஆரோக்கியமானது?

கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியதுமே பலரும் குளிர்ந்த நீரைப் பருக ஆர்வம் காட்டுவார்கள். பெரும்பாலும் பிரிட்ஜில் சேமித்து வைக்கப்படும் நீராகவே இருக்கும். அது பலருக்கும் சளி, இருமல் தொந்தரவைக் கொடுக்கும். அதற்கு மாற்றாக, தனித்துவமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட மண்பானை நீர் விளங்குகிறது. அதனால்தான் இன்றும் பல வீடுகளில் களிமண் பானைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கோடை காலத்தில் மண்பானை நீரை ஏன் பருக வேண்டும் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

மண்பானை நீரின் இயற்கை குளிர்ச்சி

பிரிட்ஜ் இல்லாத அந்தக் காலத்தில் களிமண் பானை நீர் இயற்கையாகவே குளிர்ந்த நீரை வழங்கியது. இந்தப் பானைகள் ‘ஆவியாதல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. அதற்கேற்ப, பானையின் மேற்பரப்பில் நுண்ணிய துளைகள் இருக்கும். அவை பானைக்குள் இருக்கும் நீரைச் சீராகவும் இயற்கையாகவும் குளிர்விக்க உதவுகின்றன. இது வேறு எந்தக் கொள்கலனிலும் இல்லாத தனித்துவமான பண்பாகும்.

மிதமான குளிர்ச்சியின் நன்மை

பிரிட்ஜுக்குள் இருக்கும் வரை நீர் அதிகப்படியான குளிர்ச்சியுடன் காணப்படும். ஆனால் வெளியே எடுத்ததும் சில நிமிடங்களில் அதிகப்படியான வெப்பத் தன்மை நீரை ஆட்கொள்ளும். ஆனால் மண்பானை நீர், கோடை காலத்தில் குடிப்பதற்கு ஏற்ற சரியான வெப்பநிலையில் (இதமான குளிர்ச்சியில்) காணப்படும். அதன் மிதமான குளிர்ச்சி நன்மை தொண்டைக்கு இதமாகவும் இருக்கும். சளி மற்றும் இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்களும் மண்பானை நீரைத் தயக்கமின்றி பருகலாம். ஆனால் பிரிட்ஜ் நீரை அப்படியே குடித்தால் சளி, இருமல் ஆட்கொண்டுவிடும்.

வெப்ப பக்கவாதத்தில் இருந்து பாதுகாப்பு

கோடை காலத்தில் பலருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான உடல்நலப் பிரச்சனைகளுள் ஒன்று, ‘வெப்ப பக்கவாதம்’. அதாவது அதிகப்படியான வெயில் மற்றும் வெப்பம் காரணமாக உடல் வெப்பநிலை ஆபத்தான நிலைக்கு (104 டிகிரி பாரன்ஹிட்/40 டிகிரி செல்சியஸுக்கு மேல்) உயர்ந்து, உடல் உறுப்புகள் செயலிழக்கும் நிலைக்குத் தள்ளப்படும். பானையில் சேமித்து வைக்கப்பட்ட நீரில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலின் குளுக்கோஸ் அளவைச் சீராகப் பராமரிக்க உதவும். மேலும் உடலுக்கு இதமான குளிர்ச்சி உணர்வையும் வழங்குவதால், வெப்ப பக்கவாதத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

pH சமநிலை மற்றும் ஹார்மோன் ஆரோக்கியம்

மனித உடல் இயல்பாகவே அமிலத்தன்மை (அசிடிக்) கொண்டது. ஆனால் களிமண் இயல்பாகவே காரத்தன்மை (அல்கலைன்) கொண்டது. காரத்தன்மை கொண்ட மண்பானையில் சேமித்த நீரைப் பருகும்போது, உடலின் அமிலத்தன்மையுடன் வினைபுரிந்து உடலில் சரியான pH சமநிலையை உருவாக்க உதவும். இதனால்தான் மண்பானை நீரைப் பருகுவது நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

பிளாஸ்டிக் பாட்டில்களில் நீரைச் சேமித்துப் பருகும்போது, அதில் ‘பிஸ்பினால் ஏ’ அல்லது ‘BPA’ போன்ற நச்சு வேதிப்பொருட்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளது. இவை பல வழிகளில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை. இந்த வேதிப்பொருட்கள் ஆண்களின் ‘டெஸ்டோஸ்டிரோன்’ ஹார்மோன் அளவைக் குறைப்பதாகவும், உடலின் நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும் தன்மையைக் கொண்டிருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. மாறாக, மண்பானையில் சேமித்து வைக்கப்பட்ட நீரைப் பருகுவது ஹார்மோன் அளவைச் சமநிலைப்படுத்துவதுடன் உடலின் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தும்.

முடிவு

கோடை காலத்தில் மண்பானை நீர் இயற்கையான குளிர்ச்சி, pH சமநிலை, வெப்ப பக்கவாதத்தில் இருந்து பாதுகாப்பு, மற்றும் ஹார்மோன் ஆரோக்கியம் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது. பிளாஸ்டிக் நீரை விட சிறந்ததாகவும், பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய இடம் பிடித்ததாகவும் உள்ளது. இந்த கோடையில் மண்பானை நீரை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்து ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

#மண்பானை #கோடை #ஆரோக்கியம் #இயற்கை #நீர் #குளிர்ச்சி #மண்பானை நீர் #கோடை காலம்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *