மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக் குழு: புதிய சம்பள விகிதங்கள் மற்றும் அமலாக்க காலம் குறித்த விவரங்கள்

8வது ஊதியக் குழு

இந்திய மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ள 8-வது ஊதியக் குழுவின் செயல்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. 1946-ம் ஆண்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழுக்களை அமைத்து வரும் மரபைத் தொடர்ந்து, தற்போதுள்ள பொருளாதார மாற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 3, 2025 அன்று இந்திய அரசாங்கத்தால் 8-வது ஊதியக் குழு அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது. இக்குழுவின் செயல்பாடுகள் மூலம் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, ஏறத்தாழ 70 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், ஓய்வூதியத் தொகை மற்றும் இதர படிகள் மறுஆய்வு செய்யப்பட உள்ளன.

நிர்வாகக் குழு மற்றும் கால அவகாசம்

இந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஏற்றுள்ளார். இவருடன் பேராசிரியர் புலக் கோஷ் மற்றும் பங்கஜ் ராய் ஆகியோர் உறுப்பினர்களாக இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகளை முழுமையாக ஆய்வு செய்து சமர்ப்பிக்க 18 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் காலக்கட்டத்திற்குப் பிறகு, திருத்தப்பட்ட புதிய ஊதிய விகிதங்கள் இறுதி செய்யப்பட்டு, 2027-ம் ஆண்டின் நடுப்பகுதியில் ஊழியர்களின் மாதாந்திர சம்பளப் பட்டியலில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச சம்பள நிர்ணயப் பட்டியல்

தற்போது வெளியாகியுள்ள உத்தேச தகவல்களின்படி, பல்வேறு நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஊதிய வரம்புகள் பின்வருமாறு கணக்கிடப்பட்டுள்ளன:

நிலை 1-ல் பணியாற்றுபவர்களின் சம்பளம் ரூ.18,000-லிருந்து ரூ.32,000 ஆக உயர்த்தப்பட்டு, அதிகபட்சமாக ரூ.69,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிலை 2-வில் ரூ.19,900-லிருந்து ரூ.36,000 வரை மற்றும் அதிகபட்சமாக ரூ.76,000 வரையும், நிலை 3-வில் ரூ.21,700-லிருந்து ரூ.39,000 வரை மற்றும் அதிகபட்சமாக ரூ.83,000 வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலை 4-க்கான ஊதியம் ரூ.25,500-லிருந்து ரூ.46,000 வரையிலும், அதிகபட்சமாக ரூ.97,000 வரையிலும் உள்ளது. நிலை 5-ல் ரூ.29,200-லிருந்து ரூ.53,000 வரையிலும், அதிகபட்சமாக ரூ.1.11 லட்சம் வரையிலும் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உயர்மட்ட நிலைகளைப் பொறுத்தவரை, நிலை 6-க்கு ரூ.64,000 முதல் ரூ.1.35 லட்சம் வரையிலும், நிலை 7-க்கு ரூ.82,000 முதல் ரூ.1.71 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிலை 10-ல் பணியாற்றுபவர்களுக்கு ரூ.1.02 லட்சம் முதல் ரூ.2.15 லட்சம் வரையிலும், நிலை 13-க்கு ரூ.2.25 லட்சம் முதல் ரூ.4.71 லட்சம் வரையிலும் ஊதியம் கணக்கிடப்பட்டுள்ளது.

மிக உயர்ந்த நிலை 18-ல் பணியாற்றுபவர்களின் ஊதியம் ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.4.57 லட்சமாக உயர்த்தப்பட்டு, அதிகபட்சமாக ரூ.9.57 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#centralGovernment #salaryHike #employeeNews #payCommission #8thPayCommission #centralGoverment #salaryHike #எட்டாவது ஊதியக் குழு #மத்திய அரசாங்கம் #சம்பள உயர்வு

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *