நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது மனைவி கயல்விழி தம்பதியினருக்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தி வெளியானதையடுத்து, அரசியல் களத்தில் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களையும் தாண்டி, பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.
அன்பு கலந்த வாழ்த்து
இந்தச் சூழலில், முன்னாள் அமைச்சரும் திமு சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், சீமானின் மகளைக் காண இன்று அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தார். அப்போது தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வந்திருந்த அவர், பலவிதமான தாம்பூலத் தட்டுகளுடன் சீர் வரிசைகளைக் கொண்டு வந்து வழங்கினார்.
அனிதா ராதாகிருஷ்ணன் வருகைக்காகக் காத்திருந்த சீமான், தனது வீட்டின் முன்புறமே அவரை வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். மேளதாள வாத்தியங்கள் முழங்க நடந்த இந்த நிகழ்வு, இரு குடும்பத்தினருக்கும் இடையேயான சுமூகமான உறவை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.
தங்கச் செயிது அணிவிப்பு
வீட்டிற்குள் சென்ற அனிதா ராதாகிருஷ்ணன், சீமானின் பெண் குழந்தையைத் தனது கைகளால் தடவிக்கொடுத்து வாழ்த்தினார். மேலும், குழந்தைக்குத் தங்கச் செயினை அணிவித்து தனது அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தனிப்பட்ட உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் இத்தகைய நிகழ்வுகள் அரசியல் வட்டாரத்தில் தற்போது கவனத்தைப் பெற்றுள்ளன.
கடந்த 2013-ம் ஆண்டு முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் சீமானுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில், தற்போது இரண்டாவது குழந்தையாகப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

Leave a Reply