மத்திய கல்வி வாரியத்தின் இயற்பியல் விடைத்தாள் குளறுபடி: ஐஐடி வல்லுநர்கள் குழு விசாரணை

மத்திய கல்வி வாரியம்

மத்திய கல்வி வாரியம் (CBSE) இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய அறிமுகப்படுத்திய டிஜிட்டல் முறை, தொழில்நுட்பக் கோளாறுகளால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் விடைத்தாள்கள் மாறியுள்ள விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, மத்திய அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

நடந்தது என்ன?

நாடு முழுவதும் உள்ள 7,574 தேர்வு மையங்களில் 2026 பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10 வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. மே 13 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. வழக்கம் போல, மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகல்களை இணையதளம் வழியாக சரிபார்க்கும் வசதி மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் 98 லட்சம் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டன. இந்த நடைமுறையின் போதே விடைத்தாள்கள் ஒன்றோடொன்று மாறியிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

மாணவர்களின் புகார்கள்

புதுடெல்லியைச் சேர்ந்த வேதாந்த் ஸ்ரீவஸ்தவா என்ற மாணவர், தனது இயற்பியல் பாடத்திற்கான விடைத்தாள் நகலை இணையத்தில் பார்த்தபோது, அதில் வேறொருவரின் கையெழுத்தும் எழுத்து முறையும் இருந்ததைக் கண்டறிந்தார். தனது ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியல் பாட விடைத்தாள்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, இயற்பியல் பாடத்தில் மட்டும் இந்த குளறுபடி நடந்திருப்பது உறுதியானது.

தவறான விடைத்தாளின் அடிப்படையில் அவருக்கு 50 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதனால் உயர்கல்விக்குத் தேவையான 75 சதவீத குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை அவர் இழக்க நேரிட்டது. இதேபோல், வேதியியல் பாட விடைத்தாளின் முதல் பக்கம் தனது கையெழுத்தாகவும், மற்ற பக்கங்கள் வேறொருவருடையதாகவும் இருந்ததாக மற்றொரு மாணவி புகார் அளித்துள்ளார்.

மத்திய கல்வி வாரியத்தின் பதில்

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியதையடுத்து, மத்திய கல்வி வாரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். மே 25 திங்கட்கிழமை மாலை, மாணவர் வேதாந்தைத் தொடர்பு கொண்டு, அவரது சரியான விடைத்தாளை வாரியம் முறைப்படி ஒப்படைத்தது.

விடைத்தாள்களை டிஜிட்டல் மயமாக்கும் பணியின் போது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதை வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்தத் தவறு பல மாணவர்களைப் பாதித்து இருக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ஐஐடி வல்லுநர்கள் குழு விசாரணை

விவகாரத்தின் தீவிரத்தைக் கருதி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடுகளை முழுமையாக ஆராய ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி கான்பூர் ஆகிய கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட சிறப்புக் குழு ஒன்றை நியமித்துள்ளார்.

இந்தக் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, பாதிக்கப்பட்ட மற்ற மாணவர்களுக்கான தீர்வுகள் மற்றும் எதிர்கால டிஜிட்டல் திருத்த முறைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#education #cbse #iit #indiaNews #examError #சிபிஎஸ்சி #சிபிஎஸ்சி தேர்வு #விடைத்தாள் #answerSheet #cbseExam

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *