மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), தனது பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன் கீழ், வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகளைப் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை குறித்த சுற்றறிக்கை அனைத்து இணைவு பெற்ற பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக்கொள்கை மற்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 5-ஆம் வகுப்பு வரை மட்டுமே மூன்றாம் மொழி கற்பிக்கப்பட்டு வந்தது. 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லது மாநிலத்தின் தாய்மொழி ஆகிய இரண்டு மொழிகளை மட்டுமே முதன்மைப் பாடங்களாகக் கையாண்டு வந்தனர். ஆனால், புதிய விதியின்படி மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியைத் தேர்வு செய்து மொத்தம் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும்.
அண்ணாமலையின் ஆட்சேபனை
இந்த திடீர் மாற்றத்திற்குத் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். கடந்த 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 6-ஆம் வகுப்பு முதல் மூன்றாம் மொழி கட்டாயம் என்ற அறிவிப்பு வந்தபோது, இந்திய மொழிகளின் கலாச்சாரப் பெருமையை மாணவர்கள் அறிய உதவும் என்பதால் அதை வரவேற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அந்த அறிவிப்பில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் மொழிக் கட்டாயம் என்பது 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாக அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், மே 15-ஆம் தேதி வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே இந்த நடைமுறையை அமல்படுத்த சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மாணவர்களின் மனஅழுத்தம் குறித்த கவலை
சிபிஎஸ்இ அமைப்பின் இந்த அவசர அறிவிப்பு, குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார். மாணவர்கள் ஏற்கனவே தங்களுக்கு விருப்பமான மொழிகளைத் தேர்வு செய்துள்ள நிலையில், ஒன்பதாம் வகுப்பில் திடீரென புதிய மொழியைக் கற்கக் கோருவது மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தை உண்டாக்கும் என்றும், இது அவர்களின் ஒட்டுமொத்த கல்வித் திறனைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, மத்திய கல்வி அமைச்சகம் இந்த அவசர அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ஏற்கனவே திட்டமிட்டபடி 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றும் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply