தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோர் நேற்று தொலைபேசி வாயிலாக உரையாடினர். இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவது மற்றும் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து இந்த உரையாடலில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த தொலைபேசி உரையாடலின் விபரங்களை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தனது நண்பரான முதலமைச்சர் விஜய்யுடன் உரையாடியதாகவும், தற்போது அவர் ஏற்றுக்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் என்ற பெரும் பொறுப்பிற்கு தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரிக்ஸ் மாநாடு மற்றும் தமிழக வருகை
வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை மேற்கொள்ள இந்தியாவிற்கு வர திட்டமிட்டுள்ளதாக அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இந்த பயணத்தின் போது வாய்ப்பு கிடைத்தால், தமிழகத்திற்கும் நேரில் வருகை தந்து முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடலின் மூலம் மலேசியா மற்றும் தமிழகத்திற்கு இடையிலான உறவு மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மலேசியாவில் வாழும் தமிழர்களின் நலன் மற்றும் இரு தரப்பு வர்த்தக மேம்பாடு குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.









