புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியில் மத்திய அரசின் செயல்பாட்டை நடிகர் கமல்ஹாசன் பாராட்டு

கமல்ஹாசன்

சர்வதேச அளவில் நிலவி வரும் எரிசக்தி நெருக்கடி மற்றும் எண்ணெய் விலை உயர்வு குறித்து கவலை தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திறன் கணிசமாக அதிகரித்துள்ளதை மத்திய அரசின் செயல்பாடாகக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஈரான் போரின் தாக்கத்தால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியாவைப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எண்ணெய் விலை உயர்வு மற்றும் கடல் வர்த்தகப் பாதைகள் முடக்கப்பட்டது போன்ற காரணங்களால், சமையல் எரிவாயு முதல் தொழிற்சாலைகளுக்குத் தேவையான எரிபொருட்கள் வரை அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாக அவர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

எரிசக்தி சேமிப்பின் அவசியம்

உலக அளவில் 60-க்கும் மேற்பட்ட நாடுகள் எரிபொருள் சேமிப்பு தொடர்பாகக் கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளன என்றும், சிங்கப்பூர் பிரதமர் தனது நாட்டு மக்களை இக்கட்டான காலத்திற்குத் தயாராகுமாறு கேட்டுக் கொண்டதையும் கமல்ஹாசன் சுட்டிக்காட்டினார். இந்தச் சூழலில், இந்தியப் பிரதமர் அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு எரிசக்தியைச் சேமிக்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளதை அவர் கவனத்தில் கொண்டுள்ளார்.

தேசியப் பொறுப்பு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை வலியுறுத்திய அவர், 1962-ஆம் ஆண்டு சீனப் போரின்போது மக்கள் தங்க நகைகளை வழங்கியதையும், 1965-ஆம் ஆண்டு உணவுப் பற்றாக்குறையின் போது லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் ஒரு வேளை உணவைத் தவிர்க்கக் கோரியதையும் நினைவு கூர்ந்தார். இன்றைய சூழலில் மக்கள் மிகப்பெரிய தியாகங்களைச் செய்ய வேண்டியதில்லை என்றாலும், நாட்டின் நலனுக்காகச் சிறிய அளவிலான எரிசக்தி சேமிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசுக்குக் கோரிக்கை

தனது அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டி, மத்திய அரசின் நல்ல செயல்பாடுகளைப் பாராட்டுவதாகக் கூறிய கமல்ஹாசன், கடந்த பத்து ஆண்டுகளில் சூரிய ஆற்றல் மற்றும் காற்று ஆற்றல் உற்பத்தியில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை மனதாரப் பாராட்டியுள்ளார். நிலக்கரி மற்றும் எரிவாயு பயன்பாட்டிலிருந்து விலகி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் அணுசக்தி முதலீடுகளில் அரசு காட்டும் ஆர்வம் ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம், எரிசக்தி சேமிப்பு என்பது மக்களிடமிருந்து மட்டுமே எதிர்பார்க்கப்படக் கூடாது என்றும், அரசுகளும் இதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எனவே, பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் இணைந்து ஒரு தேசிய உச்சி மாநாட்டை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

உடனடி நடவடிக்கைகளுக்கான பரிந்துரை

மக்களின் பொருளாதாரச் சுமைகளைக் குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து இரண்டு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார். முதலாவதாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில அரசுகளின் மதிப்பு கூட்டு வரி (VAT) குறைக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, ரயில், மெட்ரோ மற்றும் பேருந்து கட்டணங்களைக் குறைப்பதன் மூலம் மக்கள் தனியார் வாகனங்களைத் தவிர்த்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று சேமிக்கப்படும் ஒவ்வொரு அலகு எரிசக்தியும் நாளைய இந்தியாவை வலுப்படுத்தும் என்றும், இவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே பணவீக்கத்திலிருந்து ஏழை மக்களைக் காக்க முடியும் என்றும் அவர் தனது உரையை நிறைவு செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

#kamalhaasan #renewableenergy #indiaenergycrisis #solarpower #சூரிய #காற்றாலை மின் உற்பத்தி திறன் அதிகரிப்பு #மோடி தலைமைக்கு கமல் பாராட்டு #fuelcrisis #narendramodi #கமல்ஹாசன்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *