இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு என்பது இருவேறு தளங்களில் இயங்கும் ஒரு சிக்கலான கட்டமைப்பாகும். ஒன்று நாட்டின் எல்லைகளுக்கு வெளியே இருந்து வரும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது, மற்றொன்று நாட்டின் உட்புறத்தில் நிலவும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகளைக் கையாள்வது. இந்த இரண்டு தேவைகளையும் பூர்த்தி செய்யவே இந்திய பாதுகாப்புப் படைகள் பிரிக்கப்பட்டுள்ளன.
எல்லைப் பாதுகாப்பும் ஆயுதப் படைகளும்
இந்தியாவின் இறையாண்மையை நிலைநாட்டவும், எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களைத் தடுக்கவும் இந்திய ஆயுதப் படைகள் செயல்படுகின்றன. குறிப்பாக மேற்கு எல்லையில் பாகிஸ்தானும், வடக்கில் சீனாவும், கிழக்கில் வங்கதேசமும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதால், இங்கிருந்து வரக்கூடிய ஆபத்துகளை முறியடிக்க வலிமையான படைகள் அவசியம். இதற்காகவே இந்தியத் தரைப்படை, இந்தியக் கடற்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
இவை மூன்றையும் உள்ளடக்கியதே ‘ஆயுதப் படைகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவர்களின் முதன்மைப் பணியே இந்திய எல்லைகளுக்கு வெளியே இருக்கும் அச்சுறுத்தல்களைக் கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே. இந்த மூன்று படைகளும் நேரடியாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றன.
உள்நாட்டுப் பாதுகாப்பும் துணை ராணுவப் படைகளும்
வெளிநாட்டு அச்சுறுத்தல்களைத் தவிர்த்து, நாட்டின் உட்புறத்தில் நிலவும் பல்வேறு சர்ச்சைகள், பிரிவினைவாதப் போக்குகள் மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளைக் கையாள தனித்துவமான பாதுகாப்பு அடுக்குகள் உள்ளன. அடிப்படை அளவில் மாநில போலீஸார் சட்ட ஒழுங்கைப் பராமரிக்கின்றனர். வன்முறைகளைக் கட்டுப்படுத்தக் குற்றப்பிரிவு மற்றும் உளவுத்துறை ஆகியவை செயல்படுகின்றன.
மாநில போலீஸாரால் ஒரு கலவரத்தையோ அல்லது பெரும் வன்முறையையோ கட்டுப்படுத்த முடியாதபோது, மாநில ஆயுதப் போலீஸ் படைகள் களமிறங்குகின்றன. இருப்பினும், நிலைமை மிகவும் மோசமடையும் போது மத்திய அரசு நேரடித் தலையீட்டின் மூலம் ‘மத்திய ரிசர்வ் போலீஸ் படை’ உள்ளிட்ட படைகளை அனுப்பி வைக்கும்.
துணை ராணுவக் கட்டமைப்பின் இயக்கம்
இவை மிலிட்டரி எனப்படும் ராணுவப் படைகள் அல்ல; மாறாக ‘துணை ராணுவ அமைப்புகள்’ (Paramilitary Organizations) என்று அழைக்கப்படுகின்றன. இதில் எல்லை பாதுகாப்புப் படை (BSF), இந்தோ-திபெத் எல்லைக் காவல்படை (ITBP), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மற்றும் சாஷஸ்த்ரா சீமா பால் (SSB) ஆகியவை அடங்கும்.
இவை தவிர, நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கான தனிப் படை உண்டு. சென்னை துறைமுகம், விமான நிலையங்கள், அணுமின் நிலையங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் போன்றவற்றை பாதுகாப்பதே மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (CISF) பணியாகும். இந்த அனைத்து துணை ராணுவப் படைகளும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றன.
சிறப்புப் பணிகளுக்கான சிறப்புப் படைகள்
சில குறிப்பிட்ட காலக்கட்டங்களில் அல்லது குறிப்பிட்ட நபர்களைக் கைது செய்ய வேண்டிய அவசியத்தின் போது, பல்வேறு படைப்பிரிவுகளின் தேர்ந்தெடுத்த வீரர்களைக் கொண்டு ஒரு சிறப்பு அணி உருவாக்கப்படும். இதற்கு National Security Guard (NSG) ஒரு சிறந்த உதாரணமாகும். இதில் ராணுவ அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இருவரும் இடம்பெறுவர். இவர்களின் பணி முடிந்துவிட்டால், அந்தத் தனிக்குழு கலைக்கப்படும்.
கடந்த காலங்களில் வீரப்பனைப் பிடிக்க உருவாக்கப்பட்ட சிறப்புப் படைக்கு இது ஒரு சான்றாகும். அப்போது மாநில போலீஸார், ஆயுதப் போலீஸார் மற்றும் உளவுத்துறை எனப் பல்வேறு பிரிவுகள் இணைந்து செயல்பட்டன. அந்த இலக்கு நிறைவேறியவுடன் அந்தப் படை கலைக்கப்பட்டது. இவ்வாறு, நாட்டின் பாதுகாப்பு என்பது பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகிய இரு துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் உறுதி செய்யப்படுகிறது.

Leave a Reply