தமிழ் திரையுலகின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு இந்தியத் திரையுலகிற்கு ஈடுகொடுக்க முடியாத இழப்பாக அமைந்துள்ளது. பாரதிராஜாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சிரஞ்சீவியின் உருக்கமான இரங்கல்
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில், “இந்தியத் திரையுலகம் தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான பாரதிராஜா அவர்களை இழந்துவிட்டது. கிராமத்து மண்ணின் மணம், மனித உறவுகளின் அழகு, காதலின் தூய்மை மற்றும் சாமானிய மக்களின் உணர்வுகள் ஆகியவற்றை அவர் காலத்தால் அழியாத திரைக்கவிதைகளாக மாற்றினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாரதிராஜாவின் படைப்புகள் லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டதோடு, பல தலைமுறைத் திரைப்படப் படைப்பாளிகளுக்கு உத்வேகமாகவும் அமைந்ததாக சிரஞ்சீவி புகழாரம் சூட்டியுள்ளார். தேசிய விருதுகள் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற அவரது பங்களிப்பு அளப்பரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆராதனை திரைப்பட அனுபவம்
தொடர்ந்து தனது பதிவில், பாரதிராஜா இயக்கிய ‘ஆராதனை’ திரைப்படத்தில் ‘புலி ராஜு’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தபோது கிடைத்த அனுபவங்களை சிரஞ்சீவி நினைவு கூர்ந்தார். சினிமா மீதான பாரதிராஜாவின் தீராத ஆர்வம், எளிமை மற்றும் தனது கலைப்பணியின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவை தனது மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
“அவர் நம்மிடையே இல்லையென்றாலும், அவரது அற்புதமான திரைப்படங்கள் வாயிலாக அவரது கலை வாரிசு என்றென்றும் நிலைத்திருக்கும். இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களே, அமைதியில் துயில்கொள்ளுங்கள். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சிரஞ்சீவி தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.

Leave a Reply