தமிழ் திரைப்படத்துறையின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா (84), நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல அரசியல் தலைவர்களும், முன்னணி கலைஞர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தனது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
விஷாலின் உருக்கமான இரங்கல்
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு குறித்து நடிகர் விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான இரங்கல் செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில், “புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரும், இயக்குநர் இமயமாகப் போற்றப்படுபவருமான பாரதிராஜா அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்த செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்த தொலைநோக்குச் சிந்தனையாளர் அவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிராமிய வாழ்க்கையையும், மக்களின் உணர்வுகளையும் மிக நேர்த்தியாகத் திரையில் கொண்டு வந்ததில் பாரதிராஜாவுக்கு நிகர் யாருமில்லை என்றும், பல தசாப்தங்கள் கடந்தும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடிக்கும் கதாபாத்திரங்களை அவர் உருவாக்கியுள்ளார் என்றும் விஷால் புகழாரம் சூட்டியுள்ளார்.
பாண்டிய நாடு பட அனுபவங்கள்
பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்த விஷால், ‘பாண்டிய நாடு’ திரைப்படத்தில் தந்தை மற்றும் மகனாக நடித்தபோது அவருடன் கழித்த தருணங்களை ஒரு பொக்கிஷமாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். அந்தப் பயணத்தின் போது பாரதிராஜாவிடமிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொண்டதாகவும், ஒரு இளைஞரைப் போலத் துடிப்பாகவும் உற்சாகமாகவும் அவர் செயல்பட்ட விதம் தனக்கு பெரும் உத்வேகத்தைத் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தனது பதிவில், “தமிழ் சினிமா தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனைவி மற்றும் மகள் ஜனனி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு இந்தத் துயரத்தைத் தாங்கும் மனவலிமையை இறைவன் அளிக்கட்டும்” என்று வேண்டிக்கொண்டார்.
முதல் படத்தின் டீசர் ஒத்திவைப்பு
தற்போது ஒரு அறிமுக இயக்குநராகத் தனது முதல் திரைப்படத்தின் டீசரை வெளியிடத் திட்டமிட்டிருந்த விஷால், பாரதிராஜாவின் மறைவையக் கருத்தில் கொண்டு அதனை ஒத்திவைப்பதாகத் தெரிவித்துள்ளார். “இத்தகைய சூழலில் டீசரை வெளியிடுவது பொருத்தமாக இருக்காது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், திரையுலகைச் சேர்ந்த ஒருவனாக இருப்பதாலும் அதனைத் தள்ளிப்போடுவது எனது குறைந்தபட்ச கடமை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.







