இந்தியாவின் முதல் 100 சதவீத எத்தனால் இயங்கும் இருசக்கர வாகனம் ஜூன் 3-ல் அறிமுகம்

எத்தனால் பைக்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கான தேவையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 100 சதவீதம் எத்தனால் எரிபொருளில் இயங்கக்கூடிய இந்தியாவின் முதல் இருசக்கர வாகனத்தை ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் வரும் ஜூன் 3-ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

டில்லியில் அறிமுக விழா

புது தில்லியில் நடைபெறவுள்ள இந்த அறிமுக விழாவில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் கலந்துகொண்டு வாகனத்தைத் தொடங்கி வைக்க உள்ளனர்.

பிளெக்ஸ்-பியுவல் தொழில்நுட்பம்

முழுமையாக எத்தனால் எரிபொருளில் இயங்கும் திறன் கொண்ட இந்த வாகனம், ‘பிளெக்ஸ்-பியுவல்’ (Flex-Fuel) வாகன வகையைச் சார்ந்தது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த வாகனம் 100 சதவீத எத்தனால் எரிபொருளிலும் அல்லது சாதாரண பெட்ரோலிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் தேவைக்கேற்ப எரிபொருளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதி இதில் உள்ளது. இந்த புதிய மாடலின் பெயர் மற்றும் அதன் தொழில்நுட்பக் குறிப்புகள் அறிமுக விழாவின் போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹர்ஷவர்தன் சிட்டாலே, இந்தியாவில் பிளெக்ஸ்-பியுவல் வாகனங்களை விரைவாகக் கொண்டுவருவதற்கான மத்திய அரசின் முயற்சிக்குத் தனது நிறுவனம் முழு ஆதரவை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

மாருதி நிறுவனத்தின் எத்தனால் கார்

இருசக்கர வாகனங்களைத் தொடர்ந்து, நான்கு சக்கர வாகனத் துறையிலும் இதேபோன்ற மாற்றம் ஏற்பட உள்ளது. வரும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, 100 சதவீதம் எத்தனால் எரிபொருளில் இயங்கும் முதல் காரை மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தக் கார்களில் பொருத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட எஞ்சின்கள், தூய்மையான எத்தனால் அல்லது பெட்ரோல் மற்றும் எத்தனால் கலவையில் இயங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரப் பயன்கள்

பெட்ரோல் எரிபொருளுடன் ஒப்பிடுகையில், எத்தனால் பயன்பாட்டினால் கார்பன் உமிழ்வு கணிசமாகக் குறைகிறது. இது காற்று மாசுபாட்டைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், பெட்ரோலை விட எத்தனாலின் விலை குறைவாக இருப்பதால், வாகன உரிமையாளர்களுக்குப் பயணச் செலவு பெருமளவு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

#ethanolBike #heroMotocorp #greenEnergy #automotiveNewsTamil #ஜூன் 3ல் 100 % எத்தனாலில் இயங்கும் இந்தியாவின் முதல் பைக் அறிமுகம் #எகிறுது எதிர்பார்ப்பு #india #motorcycle #ethanol #எத்தனால்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *