Tag: Green Energy

  • இந்தியாவின் முதல் 100 சதவீத எத்தனால் இயங்கும் இருசக்கர வாகனம் ஜூன் 3-ல் அறிமுகம்

    இந்தியாவின் முதல் 100 சதவீத எத்தனால் இயங்கும் இருசக்கர வாகனம் ஜூன் 3-ல் அறிமுகம்

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கான தேவையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 100 சதவீதம் எத்தனால் எரிபொருளில் இயங்கக்கூடிய இந்தியாவின் முதல் இருசக்கர வாகனத்தை ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் வரும் ஜூன் 3-ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

    டில்லியில் அறிமுக விழா

    புது தில்லியில் நடைபெறவுள்ள இந்த அறிமுக விழாவில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் கலந்துகொண்டு வாகனத்தைத் தொடங்கி வைக்க உள்ளனர்.

    பிளெக்ஸ்-பியுவல் தொழில்நுட்பம்

    முழுமையாக எத்தனால் எரிபொருளில் இயங்கும் திறன் கொண்ட இந்த வாகனம், ‘பிளெக்ஸ்-பியுவல்’ (Flex-Fuel) வாகன வகையைச் சார்ந்தது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த வாகனம் 100 சதவீத எத்தனால் எரிபொருளிலும் அல்லது சாதாரண பெட்ரோலிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் தேவைக்கேற்ப எரிபொருளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதி இதில் உள்ளது. இந்த புதிய மாடலின் பெயர் மற்றும் அதன் தொழில்நுட்பக் குறிப்புகள் அறிமுக விழாவின் போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹர்ஷவர்தன் சிட்டாலே, இந்தியாவில் பிளெக்ஸ்-பியுவல் வாகனங்களை விரைவாகக் கொண்டுவருவதற்கான மத்திய அரசின் முயற்சிக்குத் தனது நிறுவனம் முழு ஆதரவை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

    மாருதி நிறுவனத்தின் எத்தனால் கார்

    இருசக்கர வாகனங்களைத் தொடர்ந்து, நான்கு சக்கர வாகனத் துறையிலும் இதேபோன்ற மாற்றம் ஏற்பட உள்ளது. வரும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, 100 சதவீதம் எத்தனால் எரிபொருளில் இயங்கும் முதல் காரை மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்.

    இந்தக் கார்களில் பொருத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட எஞ்சின்கள், தூய்மையான எத்தனால் அல்லது பெட்ரோல் மற்றும் எத்தனால் கலவையில் இயங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

    சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரப் பயன்கள்

    பெட்ரோல் எரிபொருளுடன் ஒப்பிடுகையில், எத்தனால் பயன்பாட்டினால் கார்பன் உமிழ்வு கணிசமாகக் குறைகிறது. இது காற்று மாசுபாட்டைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், பெட்ரோலை விட எத்தனாலின் விலை குறைவாக இருப்பதால், வாகன உரிமையாளர்களுக்குப் பயணச் செலவு பெருமளவு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தொடர்புடைய செய்திகள்

    #ethanolBike #heroMotocorp #greenEnergy #automotiveNewsTamil #ஜூன் 3ல் 100 % எத்தனாலில் இயங்கும் இந்தியாவின் முதல் பைக் அறிமுகம் #எகிறுது எதிர்பார்ப்பு #india #motorcycle #ethanol #எத்தனால்

  • 100 சதவீத எத்தனால் எரிபொருளில் இயங்கும் கார்களை அறிமுகம் செய்கிறது மாருதி நிறுவனம்: நிதின் கட்காரி அறிவிப்பு

    100 சதவீத எத்தனால் எரிபொருளில் இயங்கும் கார்களை அறிமுகம் செய்கிறது மாருதி நிறுவனம்: நிதின் கட்காரி அறிவிப்பு

    இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள்களின் இறக்குமதியைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய எரிபொருள் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, 100 சதவீதம் எத்தனால் எரிபொருளில் இயங்கும் வாகனங்களை மாருதி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

    சுற்றுச்சூழல் தினத்தில் அறிமுகம்

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதின் கட்காரி, வரும் ஜூன் 5-ஆம் தேதி கொண்டாடப்படும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாருதி சுசுகி நிறுவனம் முழுமையான எத்தனால் எரிபொருளில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். இந்த வகை வாகனங்கள் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகளைக் கணிசமாகக் குறைக்கும் என்று அவர் விளக்கினார்.

    செலவு குறைப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தி

    தற்போது தான் பயன்படுத்தும் வாகனம் 100 சதவீதம் பயோ எத்தனால் எரிபொருளில் இயங்குவதாகவும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதனைப் பயன்படுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார். பெட்ரோல் மற்றும் டீசலுடன் ஒப்பிடும்போது, இந்த எரிபொருளின் விலை மிகவும் குறைவு என்றும், இதன் மூலம் எரிபொருள் செலவு லிட்டருக்கு 25 ரூபாய் வரை குறைகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

    மேலும், எத்தனால் எரிபொருள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள்களின் தேவை குறையும். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேட்டுவதோடு, விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாயைத் தரும் என்று அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் விவசாயிகள் வெறும் உணவு உற்பத்தியாளர்களாக இல்லாமல், நாட்டின் எரிசக்தி வழங்குநர்களாகவும் மாறுவார்கள் என்றார்.

    வாகனத் துறையில் மாற்றம்

    மின்சார ஸ்கூட்டர்கள், கார்கள் மற்றும் பேருந்துகள் மட்டுமின்றி, தற்போது மின்சாரத்தில் இயங்கும் டிராக்டர்களும் அறிமுகமாகியுள்ள நிலையில், எரிசக்தி துறையில் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தற்போது டொயோட்டா, டாடா, மஹிந்திரா மற்றும் சுசுகி உள்ளிட்ட 12 முன்னணி நிறுவனங்கள் இதுபோன்ற எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

    இந்தியாவிற்குத் தேவையான எரிபொருள்களில் சுமார் 87 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தச் சூழலில், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் பயன்பாட்டைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியான எத்தனால் போன்ற மாற்று எரிபொருள்களைப் பயன்படுத்துவது அவசியமானது என்று நிதின் கட்காரி தனது உரையில் வலியுறுத்தினார்.

    தொடர்புடைய செய்திகள்

    #marutiSuzuki #ethanolFuel #nitinGadkari #greenEnergy #indianAutomotive #எத்தனாலில் இயங்கும் கார் அறிமுகம் செய்கிறது மாருதி நிறுவனம்: நிதின் கட்காரி தகவல் #எத்தனால் #கார் #நிதின் கட்காரி #மத்திய அமைச்சர்