தமிழ் திரையுலகில் இயக்கம் மற்றும் நடிப்பில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் சேரன். பாரதி கண்ணம்மா, பொற்காலம், பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, ஆட்டோகிராப் மற்றும் தவமாய் தவமிருந்து எனப் பல முக்கியமான திரைப்படங்களை இயக்கிப் பாராட்டுக்களைப் பெற்றவர். அதேபோல் ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் போன்ற படங்களில் நாயகனாகவும் நடித்திருந்தார்.
இந்நிலையில், இயக்குநர் சேரனின் தாயார் கமலா பாண்டியன் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 84 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென நிகழ்ந்த இந்த மறைவு செய்தி, திரையுலகைச் சார்ந்தவர்களையும் சேரனின் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்கள் வாயிலாகப் பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கமலா பாண்டியன் அவர்களின் உடல், அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பாளையூர்பட்டியில் வைக்கப்பட்டு, அங்கு முறைப்படி இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என்று உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply