இந்தியப் பொருளாதாரத்தின் கட்டமைப்பை மேம்படுத்துகிறோம்: பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை கட்டமைப்பை நவீனப்படுத்தி, அதன் மரபணுவையே மாற்றி அமைத்து வருகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மாநாட்டில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, ஹரியான மாநிலத்தின் கார்கோட் நகரில் மாருதி சுசூகி நிறுவனத்தின் நான்காவது வாகனத் தயாரிப்பு தொழிற்சாலையை இரு நாட்டுப் பிரதமர்களும் இணைந்து தொடங்கி வைத்தனர். இது இரு நாடுகளுக்கு இடையிலான தொழில்முறை உறவை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் ஏற்றுமதி

மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுடன் நீண்டகால உறவு கொண்டுள்ள நிறுவனங்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். குறிப்பாக, சில நிறுவனங்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவோடு இணைந்து பணியாற்றுவதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இக்கூட்டத்தில் இணைந்திருக்கும் புதிய முதலீட்டாளர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான பொருளாதாரக் கூட்டணி உலகிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். சுசூகி நிறுவனம் தயாரிக்கும் மூன்று கார்களில் இரண்டு கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அங்கிருந்து நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் விளக்கினார். ஜப்பானின் தொழில்நுட்ப நிபுணத்துவமும், இந்தியாவின் வேகமும் இணைந்தால் உலக நாடுகளுக்குப் பெரும் பயன் கிடைக்கும் என்றார்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் சீர்திருத்தங்கள்

தற்போது உலகளவில் நுகர்வு குறைவு மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடைகளால் உலகப் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில், இந்தியா அதிவேகமாக வளரும் பொருளாதாரமாகத் திகழ்வதாக பிரதமர் கூறினார். கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 12 ஆண்டுகளாக ஜப்பானின் ‘கைஜென்’ எனப்படும் தொடர் மேம்பாட்டுக் கொள்கையை இந்தியா பின்பற்றி வருவதாகவும், இதன் மூலம் பொருளாதாரக் கட்டமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வரி சீரமைப்பு, நிர்வாக வசதிகள் மற்றும் எளிதாகத் தொழில் தொடங்குவதற்கான அடுத்தகட்ட சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளதைக் குறிப்பிட்ட அவர், அனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அனுமதிக்கப்பட்டுள்ளதை வலியுறுத்தினார்.

எதிர்கால இலக்குகள் மற்றும் ஒப்பந்தங்கள்

சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கியின் ஆய்வின்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் ஜப்பானிய வணிகர்களுக்கு இந்தியா ஒரு உகந்த இடமாக மாறியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஜப்பான் பிரதமர் டகாய்ச்சியுடன் இணைந்து, பொருளாதாரப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் ஜப்பானின் முதலீட்டை 10 டிரில்லியன் யென்னாக உயர்த்த வேண்டும் என்றும், ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கையை இந்தியாவில் இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

#india-japanRelations #economicGrowth #pmModi #foreignInvestment #இந்தியாவின் பொருளாதாரத்தின் மரபணுவை மாற்றி அமைக்கிறோம்: பிரதமர் மோடி #பிரதமர் மோடி #ஜப்பான் #இந்தியா #பொருளாதாரம் #நரேந்திர மோடி

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *