காசியாபாத்தில் பச்சிளம் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்த கும்பல் கைது: 16 பேர் பிடிபட்டனர்

காசியாபாத் குழந்தை கடத்தல்

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மற்றும் டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை குறிவைத்து, அவர்களின் பச்சிளம் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்து வந்த ஒரு பெரிய கும்பலை காசியாபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய் மனதை ஆக்கிரமித்த வறுமை: கடத்தப்பட்ட குழந்தை

இந்த வழக்கின் பின்னணியில் உள்ள விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. காசியாபாத்தின் துரோனிகா சிட்டி பகுதியைச் சேர்ந்த ஹீனா என்ற பெண்ணிற்கு கடந்த மே 23 அன்று பெண் குழந்தை பிறந்தது. ஹீனாவின் குடும்பத்தில் இருந்த கடும் வறுமையைப் பயன்படுத்திக் கொண்ட அவரது உறவினரான ரபியா மற்றும் பூஜா என்ற பெண், குழந்தையை பணத்திற்கு விற்பனை செய்யுமாறு அவரை வற்புறுத்தினர்.

ஆரம்பத்தில் இதற்குச் சம்மதித்த ஹீனா, குழந்தை பிறந்த பிறகு ஏற்பட்ட தாய்ப்பாசத்தால் குழந்தையை விற்க மறுத்துவிட்டார். இருப்பினும், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு அந்தக் குழந்தையை விற்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்த மனோஜ் என்பவன், ஹீனாவைத் தூண்டினான். இதன் விளைவாக, மே 26 அன்று பிறந்து 11 நாட்களே ஆன அந்தப் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டது.

காவல்துறையின் விரைவான நடவடிக்கை

தனது குழந்தை கடத்தப்பட்டதாகத் தாய் ஹீனா அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், ரகசியத் தகவல்கள் மூலமாகவும் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஜூன் 2 அன்று குழந்தையைப் பத்திரமாக மீட்டனர். முதற்கட்டமாக 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த வழக்கில் முக்கியப் பங்காற்றிய தரன்னும், கருணா மற்றும் அனில் லக்டா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இயங்கும் விதம்: திட்டமிட்ட ஏமாற்று வேலைகள்

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்தக் கும்பல் இயங்கிய விதம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூலி வேலை செய்பவர்கள் மற்றும் வறுமையில் வாடும் கர்ப்பிணிப் பெண்களைத் தங்கள் ஆட்கள் மூலம் கண்காணித்துள்ளனர். குழந்தையற்ற வசதி படைத்த தம்பதிகளைக் கண்டறிந்து, அவர்களிடம் பல லட்ச ரூபாய்க்கு இந்தக் குழந்தைகளை விற்பனை செய்துள்ளனர். குறிப்பாக ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களைச் சேர்ந்தவர்களே இவர்களின் முக்கிய வாடிக்கையாளர்களாக இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் வாட்ஸ்அப் செயலி மூலம் பகிரப்பட்டுள்ளன. காவல்துறையினரின் கண்காணிப்பைத் தவிர்க்க, ஒவ்வொரு விற்பனை நடவடிக்கைக்குப் பிறகும் அந்த உரையாடல்களை முழுமையாக அழிக்கும் முறையை இவர்கள் கடைபிடித்துள்ளனர்.

ஏழைகளின் பயத்தை பயன்படுத்திக்கொண்ட கும்பல்

இந்தக் கும்பலின் மிக மோசமான செயல் என்னவென்றால், குழந்தையைப் பெற்றெடுத்த பெற்றோர்களுக்குப் பணம் கொடுக்கும்போது, உண்மையான நோட்டுகளுடன் கள்ள நோட்டுகளையும் கலந்து கொடுத்துள்ளனர். பெற்றோர்கள் தாங்கள் பெற்ற பணம் போலியானது என்பதை உணர்வதற்குள், இந்தக் கும்பல் குழந்தையுடன் தலைமறைவாகிவிடும்.

மேலும், குழந்தையை பணத்திற்கு விற்றது வெளிப்பட்டால் தாங்களும் சட்டப்படி தண்டிக்கப்படுவோம் என்ற பயத்தில், ஏழைப் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளிக்க மாட்டார்கள் என்பதை இந்தக் கும்பல் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 4 கைபேசிகளும், கணிசமான அளவு கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கும்பலுக்குப் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் யார் என்பது குறித்தும், சில மருத்துவமனைகள் இதில் தொடர்பு கொண்டுள்ளனவா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

#crimeNews #humanTrafficking #ghaziabad #uttarPradeshPolice #delhi #sellChildren #காசியாபாத் #டெல்லி #குழந்தைகள் விற்பனை

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *