தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநரின் உரையை முன்னிட்டு அரசியல் விவாதங்கள் வெடித்துள்ளன. மாநில ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் ஆற்றிய உரையின் நடைமுறை மற்றும் மரபுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுத்த விமர்சனங்களுக்கு, அமைச்சர் அருண்ராஜ் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
தேசியக் கீதம் குறித்த சர்ச்சை
ஆளுநரின் உரையின் போது நிகழ்ந்த நடைமுறைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் தனது உரையை எந்தவித மாற்றமும் இன்றி வாசித்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் ஆளும் தவெக அரசுக்கும், பாஜகவுக்கும் இடையே ஒரு மறைமுக உடன்பாடு இருப்பதாக அவர் சந்தேகம் தெரிவித்தார். மேலும், வழக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் பாடப்படும் என்ற நிலையில், இன்று இரண்டு முறை தேசியக் கீதம் பாடப்பட்டுள்ளது, இது இரு கட்சிகளுக்கும் இடையேயான ரகசிய உடன்பாட்டையே காட்டுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
சபாநாயகரின் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அதில் எந்தத் தவறும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மரபுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து விவாதிக்க வேண்டியதில்லை என்றும், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது என்பதே முக்கியம் என்றும் அவர் விளக்கமளித்தார்.
திமுகவின் கொள்கை மற்றும் அரசியல் விமர்சனம்
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், ஆளுநர் உரை என்பது அரசியல் அமைப்பில் மிக முக்கியமான நிகழ்வு என்று குறிப்பிட்டார். கடந்த காலங்களில் திமுக அரசு ஆளுநரின் உரையை முன்னிறுத்தி அரசியல் செய்த விதம் அனைவருக்கும் தெரியும் என்று அவர் கூறினார். குறிப்பாக, முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கீதம் முதலில் ஒலிக்க வேண்டும் என்று கூறியபோது, அதனை முன்னிட்டு திமுக செய்த வெளிநடப்பு என்பது திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் அருண்ராஜ், “மாநில உரிமை, சமூகநீதி மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகள் என்பவை திமுகவின் கொள்கைகளாக இருக்கலாம், ஆனால் அதே கொள்கைகளைத்தான் நாங்களும் கொண்டுள்ளோம். இன்று ஆளுநர் உரையை எந்தவிதப் பிரச்சனையும் இன்றி, தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடி சுமூகமாக நடத்தினோம். கடந்த காலத்தில் இதனைச் செய்யாத திமுக, இன்று அரசியல் செய்கிறது. இதன் மூலம் பாஜகவின் உண்மையான மறைமுக ஆதரவு அணியாக திமுக செயல்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

Leave a Reply