விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், செல்லா அய்யா இயக்கத்தில் 2022-ஆம் ஆண்டு வெளியாகி கவனத்தைப் பெற்ற திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது முழுமை பெற்று, வரும் ஜூலை 3-ஆம் தேதி திரைக்கு வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, இந்தியத் திரைப்படத்துறையில் முன்னணி நடிகர்களுக்குக் கிடைக்கும் ஊதியத்திற்கும், நடிகைகளுக்குக் கிடைக்கும் ஊதியத்திற்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளி குறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்துப் பதிலளித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, ஊதிய நிர்ணயம் என்பது பாலினத்தைப் பொறுத்தது அல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார்.
டிக்கெட் விற்பனையே தீர்மானிக்கும் ஊதியம்
இது குறித்து அவர் பேசுகையில், “சம்பளம் என்பது ஆண் அல்லது பெண் என்ற அடிப்படையில் அமையும் விஷயம் அல்ல. ஒரு நடிகை அல்லது நடிகரால் எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதைப் பொறுத்தே ஊதியம் தீர்மானிக்கப்படுகிறது. இது குறித்து இயக்குநர் அமீர் கான் அவர்கள் ஏற்கனவே ஒரு நேர்காணலில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்” என்றார்.
தொடர்ந்து தனது நிலைப்பாட்டை விளக்கிய அவர், “தற்போது நான் மற்ற நடிகர்களுடன் என்னை ஒப்பிட்டுக்கொள்ள விரும்பவில்லை. வரும் காலங்களில் எனது படங்கள் மிகப்பெரிய அளவில் டிக்கெட் விற்பனையை ஈர்க்கும் போது, அதற்கேற்ற ஊதியத்தை நான் கேட்பேன். அந்தத் தகுதி எனக்கு வரும் நாள் நிச்சயம் வரும், அப்போது முறையாகக் கேட்பேன்” என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
தன்னுடைய உழைப்பையும், படத்தின் வெற்றியையும் முதன்மையாகக் கருதுவதாகக் கூறிய ஐஸ்வர்யா லட்சுமியின் இந்த நேர்மையான பதில், சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Leave a Reply