தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை ஆய்வு செய்த பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநிலத்தின் பொருளாதாரச் சூழல் குறித்த தனது கவலைகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் கடன் சுமை மற்றும் வருவாய் இழப்புகள் குறித்து இதில் விரிவான தரவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடனுக்கான வட்டி மற்றும் நிதி நெருக்கடி
தமிழக அரசின் நேரடிக் கடன் ரூ.10 லட்சம் கோடியும், மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூ.3.18 லட்சம் கோடியும் என ஒட்டுமொத்தக் கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக உள்ளது. மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் 35 விழுக்காடு வட்டி செலுத்துவதற்காகவே செலவிடப்படுவதாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதிநிலைச் சீரழிவு குறித்து கடந்த ஐந்து ஆண்டுகளாகவே பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்து வந்ததே தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புதிய அரசுகள் பொறுப்பேற்கும்போது நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடுவதை ஆரோக்கியமான போக்காகக் கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், இதனை நிதிநிலையை மேம்படுத்துவதற்கான அடித்தளமாகக் கொள்ள வேண்டுமே தவிர, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விடுவதற்கான காரணமாகப் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
வரி வசூலில் பின்னடைவு
மராட்டியம், குஜராத் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தின் வருவாய் வரவுகள் சரிந்துள்ளதை அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் சொந்த வரி வருவாயின் பங்கு 5.93 விழுக்காட்டில் இருந்து 5.45 சதவீதமாகக் குறைந்திருப்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முதன்மையான காரணமாக சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூலில் உள்ள குளறுபடிகளையே அவர் கூறுகிறார். தமிழகத்தில் வரி கணக்கு தாக்கல் செய்யும் 11.40 லட்சம் நிறுவனங்களில், சுமார் 3.25 லட்சம் நிறுவனங்கள் ஒரு ரூபாய் கூட வரி செலுத்தவில்லை என்பதும், 1.94 லட்சம் நிறுவனங்கள் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே வரி செலுத்தியுள்ளன என்பதும் அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
செலவினக் கட்டுப்பாடு மற்றும் வாக்குறுதிகள்
வருவாயைப் பெருக்குவதை விட செலவுகளைக் கட்டுப்படுத்துவதே தற்போதைய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின்படி, ஊதியம், ஓய்வூதியம் மற்றும் வட்டி போன்ற பொறுப்பேற்றுக் கொண்ட செலவுகள் ரூ.2.37 லட்சம் கோடியை எட்டுகின்றன. இதனுடன் இலவசங்கள் மற்றும் மானியங்களுக்கான ரூ.1.56 லட்சம் கோடியைச் சேர்த்தால், மொத்த வருவாய் செலவுகள் மட்டும் ரூ.3.93 லட்சம் கோடியாக உயருகிறது.
இந்த நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்கவும், முந்தைய கடன்களை அடைக்கவும் 2026-27ம் ஆண்டில் மட்டும் ரூ.2 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும் சூழல் உள்ளது. மேலும், தவெக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடுதலாக ரூ.1 லட்சம் கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புதிய திட்டங்களைச் செயல்படுத்தாமலேயே, ஏற்கனவே உள்ள திட்டங்களையும் தேர்தல் வாக்குறுதிகளையும் பூர்த்தி செய்ய ரூ.3 லட்சம் கோடி கடன் தேவைப்படும் நிலையில், இதனைத் தவெக அரசு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதற்கான தெளிவான செயல்திட்டத்தையும் காலவரையறையையும் அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கேட்டுள்ளார்.

Leave a Reply