நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் நடைபெறவுள்ள இந்த முக்கிய கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் புறப்பட்டார்.
டெல்லியை சென்றடைந்த முதலமைச்சர் விஜய், அரசு ரீதியான சந்திப்புகளுக்கு முன்னதாக முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக, காங்கிரசின் மூத்த தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினார். கடந்த முறை டெல்லி சென்றபோது சோனியா காந்தியை சந்திக்கவில்லை என்ற நிலையில், இம்முறை அவரை சந்தித்து ஆலோசனைகளை பரிமாறிக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு
தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் உடன் இருந்தனர். தவெக தலைவராகவும், முதல்வராகவும் விஜய் மேற்கொண்ட இந்த சந்திப்புகள், தேசிய அரசியலில் அவருக்குக் கிடைத்துள்ள வரவேற்பையும், எதிர்கால அரசியல் உறவுகளையும் பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.
குடியரசுத் தலைவரை சந்தித்து மரியாதை
அரசு ரீதியான நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதலமைச்சர் விஜய் சந்தித்து மரியாதை செலுத்தினார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக அவர் குடியரசுத் தலைவரைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் கலந்துரையாடி ஆலோசனைகளைப் பரிமாறிக் கொண்டார்.
நிதியாயோக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் விரிவான கருத்துக்களை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply