மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நீட் தேர்வு ரத்து மற்றும் அரசுப் பள்ளிகளில் புத்தகப்பைகள் விவகாரம் குறித்து விரிவான விளக்கங்களை அளித்தார்.
புத்தகப்பைகள் சர்ச்சை குறித்த விளக்கம்
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகப்பைகள் சாலையில் வீசப்பட்டதாக எழுந்த புகார்கள் குறித்து பேசிய அமைச்சர், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதாகத் தெரிவித்தார். குறிப்பிட்ட அந்தப் பள்ளியில், ஏற்கனவே பெற்றோர்கள் மாணவர்களுக்குப் புத்தகப்பைகளை வாங்கி அளித்திருந்ததாகவும், இதனால் மாணவர்கள் விளையாட்டாக அவற்றை வீசி எறிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்தை சிலர் புகைப்படம் மற்றும் காணொலிகளாக எடுத்துப் பகிர்ந்துள்ளனர். இருப்பினும், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் அந்தப் பைகளை மீண்டும் சேகரித்துவிட்டதாகவும், தேவைப்படும் ஏழை மாணவர்களுக்கு அவை உரிய முறையில் கொண்டு சேர்க்கப்பட்டதாகவும் அமைச்சர் உறுதி அளித்தார்.
அரசியல் கூட்டணிகளும் அங்கீகாரமும்
தமிழக அரசியலில் தற்போது நிலவும் கூட்டணிகள் மற்றும் அமைச்சரவை நியமனங்கள் குறித்துக் கருத்துக் கேட்டபோது, வன்னியரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது தனிப்பட்ட நபர்களுக்கானது அல்ல என்று அவர் தெரிவித்தார். நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், குரலற்ற பிரிவினருக்கும் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
கடந்த காலங்களில் பல கட்சிகள் கூட்டணி என்ற பெயரில் வாக்குகளை மட்டும் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை என்றும், முதல்முறையாக தமிழகத்தில் முதல்மைச்சர் விஜய் இதனைச் செயல்படுத்தி காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீட் தேர்வு ரத்து மசோதா
மாணவர்களின் நீண்ட காலக் கோரிக்கையான நீட் தேர்வு ரத்து குறித்துப் பேசிய அமைச்சர், இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் மசோதாவைக் கொண்டு வருவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். நீட் ரத்து மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தீர்மானங்களை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Leave a Reply