புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கு நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள்: தமிழக அரசு புதிய உத்தரவு

திரைப்படக் காட்சிகள்

தமிழகத் திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடும் முதல் ஏழு நாட்களுக்கு, நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி அளித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. திரைப்படத் துறையினர் முன்வைத்த நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார்.

கடந்த மே 16-ஆம் தேதி, திரைப்படத் துறை சார்ந்த பிரதிநிதிகள் முதலமைச்சர் விஜயைச் சந்தித்துத் தங்களது பல்வேறு பிரச்சனைகளையும் கோரிக்கைகளையும் எடுத்துரைத்தனர். குறிப்பாக, தற்போதைய விதிகளின்படி திரையரங்குகளில் காட்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், திரைப்படங்களின் வருவாய் பாதிக்கப்படுவதாகவும், கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மாற்றப்பட்ட உரிம நிபந்தனைகள்

1957-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின்கீழ், ‘C’ படிவ உரிம நிபந்தனை 14-A-இன்படி, மாநிலத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் நாளொன்றுக்கு நான்கு காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டு வந்தன. உள்ளூர் பண்டிகை நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களில் மட்டும், மாவட்ட ஆட்சியர் அல்லது சென்னை மாநகர காவல் ஆணையரின் சிறப்பு அனுமதியோடு ஐந்தாவது காட்சியை திரையிட முடியும் என்ற நடைமுறை நடைமுறையில் இருந்தது.

திரைப்படத் துறையினரின் கோரிக்கையைத் தீவிரமாகப் பரிசீலித்த முதலமைச்சர், இந்த விதிகளில் திருத்தம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதன் விளைவாக, புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியான முதல் ஏழு நாட்களுக்கு, எந்தவிதமான கூடுதல் அனுமதியும் இன்றி தினசரி ஐந்து காட்சிகளை திரையிடத் திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களுக்கான சிறப்பு வசதி

புதிய திருத்தத்தின்படி, முதல் ஏழு நாட்கள் மட்டுமின்றி, அனைத்து உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு அதிகாரிகளிடமிருந்தோ அல்லது உரிமம் வழங்கும் அலுவலரிடமிருந்தோ தனிப்பட்ட அனுமதி பெறத் தேவையில்லை என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால், வசதி வாய்ப்புகள் உள்ள திரையரங்குகள் அதிக காட்சிகளைத் திரையிட முடியும் என்பதால், திரைப்பட தயாரிப்பாளர்களுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பதோடு, ரசிகர்களும் தங்களுக்கு விருப்பமான நேரங்களில் திரைப்படங்களைக் காணும் வசதி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

#திரைப்படம் #தமிழக அரசு #திரையரங்கு #கொலிவுட் #cmVijay #tamilNaduChiefMinisterVijay #tamilCinema

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *