கொல்கத்தாவில் பெங்காலி திரைப்பட இயக்குநர் அனிக் தத்தா உயிரிழப்பு

அனிக் தத்தா

கொல்கத்தாவில் பிரபல பெங்காலி திரைப்பட இயக்குநர் அனிக் தத்தா (66) தனது குடியிருப்பின் ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டோவர் லேன் பகுதியில் வசித்து வந்த அனிக் தத்தா, நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் ஹிந்துஸ்தான் பார்க் கட்டிடத்தில் உள்ள தனது மனைவிக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்திருந்தார். அங்கு வந்த அவர், தனது மனைவியைச் சந்திக்கச் செல்லாமல் நேரடியாகக் கட்டிடத்தின் மொட்டை மாடிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மதியம் 1:05 மணியளவில் அவர் எதிர்பாராத விதமாகக் கட்டிடத்தின் மேலிருந்து கீழே விழுந்தார். உடனடியாக மீட்புக் குழுவினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. மொட்டை மாடியில் இருந்து ஒரு தற்கொலை கடிதம் மீட்கப்பட்டுள்ளது. அதில், “எனது மரணத்திற்கு வேறு யாரும் காரணம் இல்லை” என்று அவர் எழுதியிருப்பது தெரியவந்துள்ளது. அந்தத் தற்கொலை கடிதத்தில் உள்ள கையெழுத்தை காவல்துறையினர் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

அனிக் தத்தா தனது திரைப்பயணத்தில் மொத்தம் ஏழு திரைப்படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக, 2012-ஆம் ஆண்டு வெளியான அவரது முதல் நகைச்சுவைத் திரைப்படமான ‘பூட்டர் பவிஷ்யத்’ பெரும் வெற்றி பெற்றது. அரசியல் நையாண்டிகளைத் தனது படங்களில் கையாண்ட விதம் அவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது.

திரையுலகின் இந்த இழப்பால் சக கலைஞர்களும் ரசிகர்களும் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, அனிக் தத்தாவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

#cinema #kolkata #bengaliFilmIndustry #deathNews #கொல்கத்தா #பெங்காலி சினிமா #தற்கொலை #bengaliCinema #suicide

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *