மெரினா நீலக்கொடி கடற்கரை திட்டங்கள் ஆய்வு: சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் கள ஆய்வு

மெரினா நீலக்கொடி கடற்கரை

சென்னை மெரினா கடற்கரையின் சர்வதேச தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் நீலக்கொடி திட்டப் பகுதிகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் போது, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பராமரிப்பு நிலைகளை அவர் சரிபார்த்தார்.

சர்வதேச தரத்திலான வசதிகள்

மெரினா கடற்கரையில் மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள நீலக்கொடி கடற்கரைப் பகுதி 1 மற்றும் 2 ஆகிய இடங்களில் 20 ஏக்கர் பரப்பளவில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் மூங்கிலால் ஆன நிழற்குடைகள், சாய்வு நாற்காலிகள், கண்காணிப்புக் கோபுரங்கள் மற்றும் தியான மையம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், வாசிக்கும் அறை மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் சிறப்பு இடங்கள் ஆகியவையும் இங்கு இடம்பெப்பட்டுள்ளன.

சமூக அங்கீகாரத்தின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள், பிரத்யேக விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, முதலுதவி மையம் மற்றும் திருநங்கைகளுக்கான தனித்தனியான கழிப்பறை வசதிகள் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சேவை மையமாக இந்த நீலக்கொடி பகுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தானியங்கி இயந்திரங்கள் மூலம் தூய்மையான குடிநீர் வழங்கும் வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது.

தூய்மைப் பணிகளில் கூடுதல் கவனம்

தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால், மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த சூழலை கருத்தில் கொண்டு, கடற்கரை பகுதிகளில் குப்பைகளைச் சேகரிக்கும் பணியை நாள்தோறும் சுழற்சி முறையில் தடையின்றி மேற்கொள்ள வேண்டும் என்று ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குறிப்பாக, பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள இலவசக் கழிப்பிடங்களை மிகுந்த தூய்மையுடன் பராமரிக்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதைகளில் தினசரி தூய்மைப் பணிகளை உறுதி செய்யவும் அவர் அறிவுறுத்தினார். மேலும், விவேகானந்தர் இல்லம் எதிரில் நடைபெற்று வரும் மூன்றாவது கட்டத் திட்டம், கலங்கரை விளக்கம் மற்றும் அண்ணா சதுக்கம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நான்காவது மற்றும் ஐந்தாவது கட்ட நீலக்கொடி திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பொது நீச்சல் குளம் ஆய்வு

கடற்கரைப் பகுதி ஆய்வுக்கு முன்னதாக, சென்னை மெரினா பொது நீச்சல் குளத்தையும் ஆணையாளர் பார்வையிட்டார். காலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும் இந்த நீச்சல் குளத்தை, கோடை வெப்பத்தினால் சிறுவர்களும் பொதுமக்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

நீச்சல் குளத்தின் நீர் தரம், உடை மாற்றும் அறைகள் மற்றும் கழிப்பறைகளின் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்த ஆணையாளர், தினந்தோறும் முழுமையான தூய்மையைப் பராமரிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது மண்டல அலுவலர் பானுகுமார் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

#chennaicorporation #marinabeach #blueflag #publichealth #chennainews #மெரினா #மாநகராட்சி ஆணையாளர் #ஆய்வு #inspects #marina

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *