நடிகர் அர்ஜுன், அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில், சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ப்ளாஸ்ட்’ திரைப்படம் வரும் மே 28-ஆம் தேதி திரையிடப்பட உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அர்ஜுனிடம், தமிழக முதல்வர் விஜய்யைச் சந்தித்த அனுபவங்கள் குறித்துக் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, விஜய்யின் அரசியல் வருகையும், அவர் நடித்த ‘முதல்வன்’ திரைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருவதால், அது குறித்துக் கேட்டறிந்தனர்.
முதல்வன் படத்தின் நினைவுகள்
இது குறித்துப் பதிலளித்த நடிகர் அர்ஜுன், சமீபத்தில் முதல்வர் விஜய்யைச் சந்தித்தது குறித்து விவரித்தார். “முதல்வரான பிறகு விஜய் சாரைச் சந்தித்தபோது, அவரும் இதே விஷயத்தைத் தான் என்னிடம் கூறினார். சமூக வலைதளங்களில் ‘முதல்வன்’ திரைப்படத்தைப் பயன்படுத்தி அதிக அளவில் மீம்ஸ்கள் பகிரப்படுகின்றன. நான் முதன்முதலாக அந்த முதல்வர் இருக்கையில் அமரும்போது, எனக்கு ‘முதல்வன்’ படத்தின் நினைவுகள்தான் முதலில் தோன்றியது என்று அவர் தெரிவித்தார்” என்று கூறினார்.
மேலும், சினிமா துறையிலிருந்து தனக்குத் தெரிந்த ஒரு நபர், குறிப்பாகத் தன்னுடன் இணைந்து நடித்த ஒருவர் தமிழகத்தின் முதல்வராக இருப்பது மிகுந்த பெருமையான விஷயம் என்றும், தனது முதல் தேர்தலிலேயே முதல்வர் பதவியைப் பிடித்தது ஒரு மிகப்பெரிய சாதனை என்றும் அர்ஜுன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அரசியல் வருகை குறித்த கருத்து
செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் விஜய் மற்றும் தெலுங்கானாவில் பவன் கல்யாண் போன்றவர்கள் அரசியலுக்கு வந்ததைப் போல, கன்னடத்தில் அர்ஜுன் அரசியலுக்கு வர விருப்பம் உள்ளதா என்று கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அர்ஜுன், “அரசியலுக்கு வருவது என்பது உள்ளத்திலிருந்து தோன்ற வேண்டிய ஒன்று. எனக்கு அப்படித் தோன்றவில்லை. பொதுமக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது, அதை சினிமா துறையிலேயே இருந்துகொண்டு செய்ய முடியும். தற்போதைய அரசியல் சூழலில் அதிகப்படியான நிதித் தேவைப்படுகிறது. அந்த அளவுக்கு என்னிடம் வசதிகள் இல்லை” என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், விஜய்யும் அதிக நிதி இல்லாமல் தான் அரசியலுக்கு வந்தார் என்ற கருத்து எழுந்தபோது, “விஜய் அளவுக்கு நான் பெயர் சம்பாதிக்கவில்லை, அதனால் அவர் செய்ததை என்னால் செய்ய முடியாது” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

Leave a Reply