காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்டுவதற்கு பூமிபூஜை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டவும், விவசாயிகளின் நலன்களைக் காக்கவும் தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள முதன்மைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்
இது தொடர்பாக முதன்மைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவிரி நதிநீர் தொடர்பான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சட்டத்துறை நிபுணர்கள் கலந்து கொண்டு தற்போதைய சூழல் குறித்து விவாதித்தனர்.
மேகதாது அணைத் திட்டமானது உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளுக்கு எதிரானது என்பதால், இத்திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு கடந்த 30.11.2018 மற்றும் 07.06.2022 ஆகிய தேதிகளில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தது இக்கூட்டத்தில் நினைவுபடுத்தப்பட்டது.
நீதிமன்றத் தீர்ப்புகளின் பின்னணி
கடந்த 13.11.2025 அன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மேகதாது அணைத் திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும், இத்திட்டம் தொடக்க நிலையில் உள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. மேலும், இந்தத் திட்டம் முந்தைய தீர்ப்புகளுக்கு உட்பட்டதா என்பதை மத்திய நீர்வளக் குழுமம் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று கூறி வழக்குகளை முடித்து வைத்திருந்தது.
இந்தத் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு 11.12.2025 அன்று சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இருப்பினும், அந்த மனு பின்னர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தச் சூழலில், தற்போது கர்நாடக அரசு பூமிபூஜை நடத்த முயல்வதால், அடுத்தகட்ட சட்டப் போராட்டங்களை முன்னெடுக்க முதன்மைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள்
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர். மேலும், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
காணொலிக் காட்சி வாயிலாக மூத்த வழக்கறிஞர் ஜி. உமாபதி மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் ஆர். சுப்பிரமணியன் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.

Leave a Reply