சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றி குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சூர்யா, படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்றிருக்கும் ‘கருப்பு பாடல்’ உருவான விதம் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
உதவியாளரின் யோசனையும் கிளைமாக்ஸ் பாடலும்
கடந்த 25 ஆண்டுகளாகத் தன்னுடன் பணியாற்றி வரும் உதவியாளர் குமார் அளித்த யோசனையின் மூலமே அந்தப் பாடல் உருவானதாக சூர்யா தெரிவித்தார். படத்தின் படத்தொகுப்பு பணிகள் முழுமையாக முடிந்து ஐந்து மாதங்கள் கடந்த பிறகே இந்தப் பாடலைப் படமாக்க முடிவு செய்ததாகக் குறிப்பிட்டார்.
அந்தக் காலகட்டத்தில் இருந்த பொருளாதாரச் சூழல் காரணமாக இந்தப் பாடலைத் தவிர்த்திருக்க வாய்ப்பு இருந்தும், படத்தின் கருப்பொருளை வலுப்படுத்த அந்தப் பாடல் அவசியம் என்று கருதி அதைச் சேர்த்ததாக அவர் விளக்கினார். அந்த முடிவுவே படத்தின் இறுதிப் பகுதியை வலுப்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இயக்குநர் பாலாஜியின் பார்வை மற்றும் குழுவின் பங்களிப்பு
இப்படத்தைப் பற்றிப் பேசிய சூர்யா, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் நம்பிக்கையே இந்த வெற்றிக்குக் காரணம் என்றார். முதல் சந்திப்பிலிருந்தே அனைத்து நிகழ்வுகளும் திட்டமிட்டபடி சரியாக அமைந்ததாகவும், அதற்கு ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
தியேட்டர்களில் ரசிகர்களிடமிருந்து கிடைத்த பெரும் வரவேற்பு குறித்துப் பேசிய அவர், “இத்தகைய அன்பையும் எதிர்வினையையும் சமீபகாலமாக எந்தப் படத்திற்கும் பார்த்ததில்லை. தமிழ்நாட்டைத் தாண்டி பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இந்தப் படத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் தொழிலில் இருப்பதன் மகிழ்ச்சியை மீண்டும் உணர்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
வெற்றிக்குக் காரணம்
படத்தின் கதையை உருவாக்குவதில் பலரின் பங்களிப்பு இருந்ததாகவும், அந்த உணர்வுகளைக் கணிக்காமல் நேர்த்தியாகக் கடத்தியதே வெற்றிக்குக் காரணம் என்றும் அவர் கூறினார். மேலும், சரியான முடிவுகளை எடுக்க உதவிய இறைவனுக்கும், ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply