அமெரிக்காவின் பணி விசா தேர்வு நடைமுறைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மாற்றங்களைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டில் எச்-1பி விசாக்களுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக டொனால்டு டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விசா திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் போக்குக்கு எதிராக எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கையாகவே இதனை வெள்ளை மாளிகை பார்க்கிறது. குறைந்த ஊதியத்தில் பெருமளவிலான பதிவுகளைச் சமர்ப்பித்து, திட்டத்தின் நோக்கத்தைச் சிதைத்த காலம் முடிவுக்கு வந்திருப்பதாக அந்த நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பங்களின் எண்ணிக்கை சரிவு
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, முறையாகச் சமர்ப்பிக்கப்பட்ட எச்-1பி பதிவுகள் கடந்த ஆண்டை விட 38.5 சதவீதம் சரிந்துள்ளன. இதன்படி, 2026 நிதியாண்டில் 3,43,981 ஆக இருந்த பதிவுகளின் எண்ணிக்கை, 2027 நிதியாண்டில் 2,11,600 ஆகக் குறைந்துள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகள்
குறிப்பாக இந்தியத் தொழில் வல்லுநர்களால் பெருமளவில் பயன்படுத்தப்படும் இந்த விசா திட்டம், கடந்த சில ஆண்டுகளாகத் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. விசா ஒதுக்கீட்டு முறையில் நிலவிய முறைகேடுகளைத் தடுக்கவும், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் அமெரிக்க அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஊதியத் தேவைகளை அரசு கடுமையாக்கியதுடன், விண்ணப்பங்களுக்கான கட்டணங்களையும் உயர்த்தியது. இதன் விளைவாகவே, தகுதியற்ற மற்றும் குறைந்த ஊதியப் பதிவுகளின் எண்ணிக்கை தற்போது குறைந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

Leave a Reply