டெல்லியில் வரும் மே 28-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பசுக்கள் மற்றும் ஒட்டகங்கள் உள்ளிட்ட விலங்குகளை பலியிடுவதற்கு டெல்லி அரசு முழுமையான தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
தற்போது டெல்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பாரதிய ஜனதா கட்சி அரசு ஆட்சியில் உள்ளது. இந்த நிர்வாகத்தின் கீழ், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட திட்டங்களை உறுதி செய்ய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொது இடங்களில் பலியிட தடை
இது குறித்து டெல்லி மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்ரீத் பண்டிகையை அனைத்துத் தரப்பினரும் அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, சட்டப்படி தடை செய்யப்பட்ட பசு மற்றும் ஒட்டகங்களை பலியிடுவது முற்றிலும் சட்டவிரோதமானது என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், குடியிருப்புப் பகுதிகள், பொதுச் சாலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் திறந்தவெளி இடங்களில் விலங்குகளை பலியிட முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் மற்றும் மையங்களில் மட்டுமே குர்பானி வழங்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பும் சட்ட நடவடிக்கையும்
சட்டவிரோதமாக இயங்கும் விலங்கு சந்தைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத இடங்களில் நடைபெறும் விற்பனையைத் தடுக்க அரசு சார்பில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விதிமுறைகளை மீறி விலங்குகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் பலியிடுபவர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விலங்குகளை பலியிட்ட பிறகு, அவற்றின் கழிவுகளைத் திறந்தவெளியிலோ அல்லது பொது வடிகால்களிலோ கொட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்களின் சிரமத்தைக் குறைக்கவும், சுகாதார சீர்கேடுகளைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply