வட இந்தியாவில் கடும் வெப்ப அலை: உத்தரப்பிரதேசத்தில் 48 டிகிரி செல்சியஸுக்கு உயர்ந்த வெப்பநிலை

வெப்ப அலை

வட இந்திய மாநிலங்கள் தற்போது மிகக் கடுமையான கோடை வெப்பத்தின் பிடியில் சிக்கியுள்ளன. குறிப்பாக, உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாந்தா மாவட்டத்தில் வெப்பநிலை 48.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது அந்தப் பகுதியில் இந்த ஆண்டின் மிக உயர்ந்த வெப்பநிலையாகும்டன், இந்தியாவிலேயே தற்போது அதிக வெப்பம் நிலவும் பகுதியாகவும் மாறியுள்ளது.

முடங்கிய இயல்பு வாழ்க்கை

பாந்தா மாவட்டத்தில் நிலவும் கடும் உலர் காற்று மற்றும் தாங்க முடியாத வெயிலின் தாக்கத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி ஆனதற்குக்ள் சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை மையத்தின் தரவுகள்

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பாந்தா மாவட்டத்தின் தற்போதைய வெப்பநிலை அதன் இயல்பான சராசரி அளவை விட 4.5 டிகிரி செல்சியஸ் கூடுதலாக உள்ளது. இந்த அதீத வெப்பத்திற்குப் பல காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இப்பகுதிகளில் மரங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டது, சட்டவிரோத மணல் கொள்ளை மற்றும் வறண்ட நிலப்பரப்பு ஆகியவை வெப்பநிலையை மேலும் உயர்த்தியுள்ளன என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிற மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம்

உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி, இந்தியாவின் பல முக்கிய நகரங்களிலும் வெப்பம் 45 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. டெல்லியில் 45.8 டிகிரி செல்சியஸாகவும், மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோவில் 47.4 டிகிரி செல்சியஸாகவும், மகாராஷ்டிராவின் வர்தா பகுதியில் 47.1 டிகிரி செல்சியஸாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் உடல்நல பாதிப்புகளையும், கடும் சிரமங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

மருத்துவ அவசர நடவடிக்கைகள்

வெப்பத்தின் தாக்கத்தால் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெப்ப பக்கவாதம் (Heat Stroke) போன்ற பாதிப்புகள் உத்தரப்பிரதேசத்தில் அதிகரித்து வருகின்றன. இதனை எதிர்கொள்ளும் வகையில், மாநிலத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான சிகிச்சை உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

#weatherUpdate #northIndia #uttarPradesh #climateChange #வெயில் #வானிலை ஆய்வு மையம் #heatWave #meteorologicalCentre

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *