நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா பரப்பாடி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் சாம்ராஜ் (30) என்பவர், அப்பகுதியில் தகராறு செய்த வழக்கில் விஜயநாராயணம் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பதற்காக காவலர்கள் முத்துராமலிங்கம் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரும் அழைத்துச் சென்றனர்.
சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில், அலெக்ஸ் சாம்ராஜ் தனது உடல்நலம் சரிப்பதாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கச் செய்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தபோது, மதிய வேளையில் காவலர்களின் கண்காணிப்பை மீறி அலெக்ஸ் சாம்ராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை
கைதி மாயமானதை அறிந்த காவலர்கள், உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமாருக்குத் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கைதியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
விசாரணையில், தப்பிச் சென்ற அலெக்ஸ் சாம்ராஜ் மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு, மீண்டும் பேருந்து மூலம் நெல்லைக்குத் திரும்பியது தெரியவந்தது. இதனை முன்கூட்டியே அறிந்த போலீசார், நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் மறைந்திருந்து கண்காணித்தனர். குறிப்பிட்ட பேருந்திலிருந்து அவர் இறங்கியபோது, அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
காவலர்களுக்குத் துறை ரீதியான நடவடிக்கை
கைதியை முறையாகக் கண்காணிக்கத் தவறியதுடன், பணியில் மிகுந்த கவனக்குறைவாகச் செயல்பட்ட காவலர்கள் முத்துராமலிங்கம் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply