தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் கட்சி உருவெடுத்து ஆட்சிக்கு வந்தாலும், அந்த ஆட்சி அடிப்படையில் திராவிட ஆட்சிதான் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெறவுள்ள திரைப்படத் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காகச் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்திறங்கினார் கமல்ஹாசன். அப்போது அங்கு செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசினார்.
புதிய ஆட்சிக்கு கால அவகாசம் தேவை
தற்போதைய முதலமைச்சர் விஜயின் நிர்வாகம் குறித்துக் கேட்டபோது, ஆட்சி பொறுப்பேற்று இரண்டே நாட்களில் கருத்து தெரிவிப்பது ஜோதிடர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று குறிப்பிட்டார். நிர்வாகத் திறமையை மதிப்பிட குறைந்தபட்சம் ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்றார். மேலும், அரசியலில் புதிதாக நுழைந்தவர்களைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும், அதே சமயம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கவும் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்களாகிய நீங்கள் தான் அவருக்கு வாக்களித்தீர்கள், எனவே அவரது செயல்பாடுகளை நீங்களே கண்காணிக்க வேண்டும்; நாங்களும் கண்காணிப்போம் என்று அவர் தெரிவித்தார்.
திராவிட அரசியல் குறித்த விளக்கம்
தமிழகத்தில் திராவிடக் கொள்கைகள் இல்லாத புதிய கட்சி ஆட்சி அமைத்துள்ளதாகக் கூறப்படுவது குறித்துப் பேசிய அவர், “தமிழகத்தில் இருந்து ஒருவர் புதிய கட்சியைத் தொடங்கி ஆட்சி நடத்தினால், அது இயல்பாகவே திராவிட ஆட்சியாகத்தான் இருக்கும்” என்று அழுத்தமாகத் தெரிவித்தார்.
ரஜினிகாந்துடனான போட்டி
நடிகர் ரஜினிகாந்த், “கமல் முதல்வராக வந்தாலும் நான் பொறாமைப்பட மாட்டேன்” என்று கூறியது குறித்துப் பேசிய கமல்ஹாசன், தாங்கள் இருவரும் ஆரோக்கியமான போட்டியை எதிர்கொள்வதாகக் கூறினார். இது பொறாமை அல்ல, மாறாக விளையாட்டுத் துறையில் சிறந்த விளையாட்டு வீரர்களைப் போலத் தாங்கள் இருவரும் போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.
மேலும், அ.தி.மு.க கட்சியில் நிலவும் உட்கட்சி விவகாரங்கள் குறித்துக் கேட்டபோது, மற்றவர்களைப் போலவே தானும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறி உரையாமு முடித்தார்.

Leave a Reply