தமிழக சட்டப்பேரவையில் தந்தை-மகன், அண்ணன்-தம்பி என பல உறவுமுறையினர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். ஆனால், 35 ஆண்டுகளுக்குப் பிறகு மாமியாரும் மருமகனும் வெவ்வேறு தொகுதிகளில் வென்று, ஒரே அவையில் உறுப்பினர்களாகப் பதவியேற்கும் தருணம் இந்தத் தேர்தலில் நிகழ்ந்துள்ளது.
வெவ்வேறு கட்சிகளில் போட்டி
கடந்த இருபது ஆண்டுகாலமாக திமுக வசம் இருந்த லால்குடி தொகுதியை, அதிமுக சார்பில் போட்டியிட்ட லாட்டரி அதிபர் மார்டினின் மனைவி லீமா ரோஸ் கைப்பற்றினார். அதேநேரம், சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட அவருடைய மருமகன் ஆதவ் அர்ஜுனா, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றினார். இருவரும் வெவ்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் என்றாலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியாரும் மருமகனும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்க உள்ளனர்.
முன்னுதாரணம்: 1991 தேர்தல்
முன்னதாக 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இதேபோன்ற ஒரு நிகழ்வு பதிவானது. அரசியல் களத்தில் ‘அக்கா’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவரான ஏ.எஸ். பொன்னம்மாள், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் அவரது மருமகன் பழனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சுப்புரத்தினம் வெற்றி பெற்றார்.
சுவாரசியமான வேறுபாடு
1991-ல் மாமியாரும் மருமகனும் ஒரே கூட்டணியில் (அதிமுக, காங்கிரஸ்) இருந்து சட்டமன்றத்திற்குச் சென்றனர். ஆனால், 2026-ல் லீமா ரோஸ் (அதிமுக) மற்றும் ஆதவ் அர்ஜுனா (தவெக) என வெவ்வேறு கட்சிகளில் இருந்து சட்டமன்றத்திற்குச் செல்வது கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply