தேர்தல் சாதனை ஆட்சியிலும் தொடர விஜய்க்கு தேவை ஒரு சாட்டை!

நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தல், தமிழக அரசியலை தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறது. 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு புரட்சியை நிகழ்த்தி காட்டியிருக்கிறார், ஜோசப் விஜய். பெயரில் திராவிடம் இல்லாத ஒரு கட்சி இங்கே ஆட்சிக்கு வரவே முடியாது என்ற வாதத்தை தகர்த்திருக்கிறது, அவருடைய தமிழக வெற்றிக் கழகம். ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் ஒளிந்திருக்கும் சவால்கள் ஏராளம்.

ஊழல் ஒழிப்பு சவால்

அரசு நிர்வாகத்துக்குள் உள்ள அடுக்கடுக்கான திரைகளை, புதிய அரசு கிழிக்க வேண்டியிருக்கும். கிழித்தால் தான், வெளிப்பார்வைக்கு கவர்ச்சியாக காட்டப்பட்ட அழுக்குகளும், அநீதிகளும் வெளிச்சத்துக்கு வரும்; அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் ஊழலுக்கு, எத்தனை ஊற்றுக் கண்கள் என்பதை அடையாளம் காண முடியும். திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் ஒரு அங்குலம் கூட முன்னேறவில்லை என்று சொல்ல முடியாது; அதே சமயம், ஊழல் பேயை ஒழித்துக் கட்டியிருந்தால், இன்னும் பல மடங்கு வளர்ச்சியை நம் மாநிலம் கண்டிருக்க முடியும்.

சட்டம் – ஒழுங்கு பிரச்னை

இலவசங்களை அள்ளி அள்ளி கொடுத்தும், தமிழக பெண்கள் நம்மை ஏன் நிராகரித்தனர் என்ற கேள்விக்கு, ஆட்சியை இழந்தவர்கள் விடை தேடிக் கொண்டிருக்கின்றனர்; கண்ணை மூடிக் கொண்டு சொல்ல முடியும், சட்டம் – ஒழுங்கு பிரச்னை தான் காரணம் என்று! வேங்கைவயல் தொடங்கி, அண்ணா பல்கலைக் கழக வளாகம் வரை நடந்த சீரழிவுகளுக்கு பின்னணியில் உள்ளவர்கள், இன்னமும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் சுதந்திரமாக திரிகின்றனர். காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதை, நீதிமன்றங்களே வேதனையுடன் சுட்டிக் காட்டும் அவலம் நிலவுகிறது.

வாக்குறுதிகள் நிறைவேற்றம்

‘டாஸ்மாக் கடைகளை மூடுவேன்; நீட் தேர்வை ஒழிப்பேன்’ என்று வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியை பிடித்த பிறகு, ‘ஏன் நிறைவேற்றவில்லை?’ என்று கேட்ட ஊடகங்களுக்கு, ஆட்சியாளர்கள் அளித்த எகத்தாளமான பதில்களைக் கண்டு முகம் சுளித்ததை கவனிக்க, ஆட்சியாளர்கள் ஏனோ மறுத்து விட்டனர். எதற்கெடுத்தாலும் திராவிடக் கொள்கை என்ற கேடயத்துடன் மத்திய அரசை எதிர்த்த போக்கை, அதனால் ஏற்பட்ட ஏராளமான திட்ட இழப்புகளை, இளைஞர்கள் அங்கீகரிக்கவில்லை.

நல்லாட்சிக்கான பாதை

குறுகிய, சுயநல, திராவிட சித்தாந்த கண்ணோட்டம் இல்லாத உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற அனுபவசாலிகள் பலர் இருக்கின்றனர்; அவர்களில் சிறந்தவர்களை துறைவாரியாக அடையாளம் கண்டு ஆலோசகர் குழு உருவாக்கினால், அரசுக்கு நல்ல யோசனைகள் கிடைக்கும். நடை, உடை, பேச்சு, பிரசாரம் என பல வகையிலும் இதுவரை தமிழக தலைவர்கள் எண்ணிப் பார்க்காத மாற்றங்களை விஜய் பின்பற்றி வருகிறார். அதே மாற்றத்தை அரசு நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் செய்யத் துணிந்தால், த.வெ.க.,வுக்கு ஓட்டு போட்டவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தமிழகம் முன்மாதிரி மாநிலம் ஆகும்.

மிகப்பெரிய சவால் தான்; ஆனால், சாதிக்க முடியாதது அல்ல!

#தேர்தல் #விஜய் #தமிழக அரசியல் #த.வெ.க #ஊழல் #சட்ட ஒழுங்கு #தேர்தல் சாதனை ஆட்சியிலும் தொடர விஜய்க்கு தேவை ஒரு சாட்டை!

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *