சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐ.பி.எல். 2026 போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு இலவச மெட்ரோ பயண வசதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
முக்கிய சலுகை விவரங்கள்
பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், நகரில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்கு தடையற்ற பயணத்தை வழங்கவும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் CSK Cricket Limited நிறுவனத்துடன் இணைந்து “ஐபிஎல் 2026” லீக் போட்டிகளைக் காண வரும் ரசிகர்களுக்காக, பிரத்யேக மெட்ரோ பயணங்களை வழங்க முன்வந்துள்ளது.
இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப்பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். சென்னையில் செயல்பாட்டில் உள்ள எந்தவொரு மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.
போட்டி மற்றும் பயண நேரம்
அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2026 லீக் போட்டி எண் 37, ஏப்ரல் 26, 2026 அன்று நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்காக ரசிகர்களுக்கு ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
QR குறியீடு மூலம் பயணம்
ஸ்பான்சர் செய்யப்பட்ட ஐபிஎல் போட்டிக்கான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், நுழைவுச்சீட்டில் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். போட்டி நடைபெறும் நாளன்று, மெட்ரோ ரெயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இயக்கப்படும்.
மெட்ரோ நிறுவனம் வேண்டுகோள்
ஐபிஎல் 2026 போட்டியை காண செல்பவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது என பதிவிட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகை ரசிகர்களுக்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply