தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் கழக வேட்பாளராகத் தேர்வு செய்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் நன்றி பதிவு
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளராக என்னைத் தேர்வு செய்து மகத்தான வாய்ப்பு அளித்து, என்னை ஆதரித்து தேர்தல் பரப்புரை ஆற்றிய கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
கூட்டணி தலைவர்களுக்கும் நன்றி
மேலும் தேர்தல் பரப்புரையில் உறுதுணையாக இருந்த துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கழக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா, திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி, தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளர் தங்கதமிழ்செல்வன் ஆகியோருக்கும் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். “களத்தில் அயராது உழைத்த கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள், சமூக வலைதளப் போராளிகள், தன்னார்வலர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் வாக்காளர்கள் என அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply