அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 70 அமெரிக்க டாலரில் இருந்து 119 டாலர் வரை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனால் உலகின் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது.
ஆனால், இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. இந்நிலையில் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28 வரை உயர்த்தப்படலாம் என செய்திகள் வெளியாகி இருந்தன. இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசின் விளக்கம்
“பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இது போன்ற திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. மக்கள் இடையே பீதியை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன” என்று அமைச்சகம் கூறியுள்ளது.
சர்வதேச எண்ணெய் விலை ஏற்றம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்திய அரசு பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாத ஒரே நாடு இந்தியா தான் என்று அமைச்சகம் விளக்கியுள்ளது. இது உலக சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வால் மக்களை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply