தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 92.62 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.61 சதவீத வாக்குகளும் பதிவாகின. மேற்கு மற்றும் உள் மாவட்டங்கள் பெரும் எழுச்சியைக் கண்டுள்ளன.
மேற்கு மாவட்டங்கள் முன்னிலை
கரூர் மாவட்டம் 92.62 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சேலம் 90.74%, நாமக்கல் 90.21%, தருமபுரி 90.14%, ஈரோடு 90.10% ஆகிய மாவட்டங்கள் 90 சதவீத வாக்குப்பதிவைத் தாண்டியுள்ளன. மேலும், ராணிப்பேட்டை 89.89%, திருவண்ணாமலை 89.49%, திண்டுக்கல் 89.15%, விழுப்புரம் 88.99%, திருப்பத்தூர் 88.96% ஆகிய மாவட்டங்களும் முன்னிலைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
குறைந்த வாக்குப்பதிவு மாவட்டங்கள்
கன்னியாகுமரி மாவட்டம் 75.61% வாக்குகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. சிவகங்கை 76.65%, ராமநாதபுரம் 77.03%, திருநெல்வேலி 77.93%, நீலகிரி 78.96% ஆகிய மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு 80 சதவீதத்திற்கும் கீழே பதிவாகியுள்ளது. மதுரை 80.54%, தூத்துக்குடி 80.55%, தஞ்சாவூர் 80.64%, தேனி 81.53%, மயிலாடுதுறை 82.14% ஆகிய மாவட்டங்களும் குறைந்த வாக்குப்பதிவு பட்டியலில் உள்ளன.
தொகுதி அளவில் சாதனை
சேலம் மாவட்டத்தின் வீரபாண்டி தொகுதி 93.43 சதவீத வாக்குகளுடன் மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் குமாரபாளையம், கரூர் மாவட்டத்தின் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு, ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை ஆகிய தொகுதிகள் தலா 92 சதவீத வாக்குப்பதிவை பதிவு செய்துள்ளன. மறுபுறம், திருநெல்வேலி மாவட்டத்தின் பாளையங்கோட்டை தொகுதியில் வெறும் 68 சதவீத வாக்குகள் பதிவாகி மாநிலத்தில் குறைந்தபட்சமாக உள்ளது. கிள்ளியூர் 71%, மதுரை வடக்கு 72%, காரைக்குடி மற்றும் மதுரை மத்திய தொகுதிகளில் 73%, குளச்சல் தொகுதியில் 74 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.
சென்னை மாற்றம்
பெருநகரங்களில் வாக்குப்பதிவு குறையும் என்ற பிம்பத்தைச் சென்னை இம்முறை உடைத்துள்ளது. சென்னையின் சராசரி வாக்குப்பதிவு 83.73% ஆக உயர்ந்துள்ளது. ஆர்.கே. நகர் தொகுதியில் 90.50% வாக்குகள் பதிவாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் மட்டும் 74.89% வாக்குகள் பதிவாகியுள்ளன. மக்களின் இந்த மாபெரும் தீர்ப்பு யாருக்குச் சாதகமாக அமையும் என்பது வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும்.

Leave a Reply