காதலனுடன் நெருக்கம்: கழிவறையில் குழந்தை பெற்று கொலை

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே தேவனஹள்ளி தாலுகா விஸ்வநாதபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பீரசந்திராவில் ஐபோன்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான அதிகாரிகள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், நிறுவனத்தில் உள்ள ஒரு கழிவறையில் உள்ள குப்பை தொட்டியில் பச்சிளம் சிசுவின் உடல் கிடந்தது.

கழிவறையில் சிசு உடல் கண்டுபிடிப்பு

கழிவறைக்கு சென்ற ஒரு பெண் குப்பைக்குள் பச்சிளம் சிசு கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி நிறுவன அதிகாரிக்கு அவர் தகவல் தெரிவித்தார். உடனடியாக விஸ்வநாதபுரா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பச்சிளம் சிசுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

கண்காணிப்பு கேமராவில் கைதான இளம்பெண்

அப்போது அந்த பச்சிளம் சிசு பிறந்த சில நிமிடங்களிலேயே கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பதும், கழிவறையிலேயே ஏதோ பெண்ணுக்கு பிரசவம் நடந்து குழந்தை பெற்றெடுத்திருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் நிறுவனத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அங்கு பணியாற்றி வரும் ரேணுகா என்ற இளம்பெண்தான் கடைசியாக கழிவறைக்கு சென்று வந்தது தெரியவந்தது.

உடனே ரேணுகாவை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ரேணுகாவுக்கு திருமணம் ஆகவில்லை. ஆனாலும் காதலனால் அவர் கர்ப்பமாகி உள்ளார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரேணுகாவுக்கு நிறுவனத்தில் வைத்தே பிரசவ வலி வந்ததால், அவர் கழிவறைக்கு சென்று குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

கொலை வழக்கு பதிவு

திடீரென்று தனக்கு குழந்தை பிறந்ததால் பதற்றத்தில் பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, உடலை குப்பையில் வீசி இருந்தார். மேலும் கழிவறையில் இருந்த ரத்தத்தை சுத்தம் செய்துவிட்டு யாருக்கும் தெரியாதது போல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ரேணுகாவை உடனடியாக போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும், அவரிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம்? குழந்தையை கொன்றது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரேணுகா மீது விஸ்வநாதபுரா போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

#கர்நாடகா #குழந்தை கொலை #தனியார் நிறுவனம் #காதலன் #கர்ப்பம் #வழக்கு #பெங்களூரு #கிரைம் செய்திகள் #இளம்பெண் #குழந்தை

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *