சத்ய சாய்பாபா ஆராதனை மகோற்சவம்; புட்டபர்த்தியில் குவிந்த பக்தர்கள்

புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் சிறப்பாக நடைபெற்றது. உலகெங்கிலும் உள்ள சத்ய சாய் பாபாவின் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

ஆராதனை மகோற்சவத்தின் சிறப்புகள்

ஸ்ரீ சத்ய சாய் ஆராதனா மஹோத்ஸவம் என்பது பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா தன் பௌதிக உடலை விட்டு, ஜோதி ரூபமாக மாறிய தினத்தை நினைவு கூரும் ஒரு புனிதமான நிகழ்வாகும். சுவாமியின் தெய்வீகத்தை உணர்ந்து, அவர் நம் இதயங்களில் வாழ்கிறார் என்பதை கொண்டாடும் நாள் இது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24ம் தேதி ஸ்ரீ சத்ய சாய் ஆராதனா மஹோத்ஸவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உண்மை, அமைதி, அன்பு மற்றும் அகிம்சை ஆகிய மனித விழுமியங்களின் நடைமுறைக்கு முக்கியத்துவம் அளித்து இந்த நாளை உலக மனித மதிப்புகள் தினமாக ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச அமைப்பு கொண்டாடுகிறது.

நிகழ்ச்சி நிரல் விவரங்கள்

இன்று காலை 8:00 மணிக்கு வேத பாராயணத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, காலை 8:10 மணிக்கு சாய் பஞ்சரத்ன கிருதிகள், காலை 9:00 மணிக்கு ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை உறுப்பினர் எஸ்.எஸ். நாகானந்த் அறிமுக உரை, காலை 9:10 மணிக்கு நிமிஷ் பாண்டியா (AIP) உரை நடைபெற்றது.

காலை 9:20 மணிக்கு தெய்வீக சொற்பொழிவு நடைபெற்றது. ‘தெய்வீகத்தைத் தவிர வேறெதுவும் நிரந்தரமானது இல்லை. நம் அன்பினால் அவனை அடைய வேண்டும்’ என்று பகவான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். காலை 9:35 மணிக்கு பஜனைகள் தொடர்ந்து மங்கள ஆரத்தி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

மாலை நிகழ்ச்சிகள்

மாலை 5:00 மணிக்கு வேத பாராயணம், மாலை 5:45 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் உள்ள சாய்பாபா மையங்களில் இந்த நாளில் சிறப்பு பஜனைகள் மற்றும் ஏழை எளியோருக்கு உணவளித்தல் போன்ற சேவைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

உலக மனித மதிப்புகள் தினம்

ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச அமைப்பு இந்த நாளை உலக மனித மதிப்புகள் தினமாக கொண்டாடுகிறது. உண்மை, அமைதி, அன்பு மற்றும் அகிம்சை ஆகிய மனித விழுமியங்களை பரப்பும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெறுகின்றன. பகவானின் கல்வி நிறுவனங்களின் மாணவர்களும், ஊழியர்களும் கூட்டாக தங்கள் மனமார்ந்த நன்றியை ஆத்மார்த்தமான பாடல்கள் மூலம் வழிபட்டனர்.

#சத்ய சாய்பாபா #ஆராதனை #புட்டபர்த்தி #ஏப்ரல் 24 #மனித மதிப்புகள் #சாய் பக்தர்கள் #சத்ய சாய்பாபா ஆராதனை மகோற்சவம் #புட்டபர்த்தியில் குவிந்த பக்தர்கள்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *