ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை; காலம் கடந்து கொண்டிருக்கிறது

வாஷிங்டன்: “ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்கா அவசரப்படவில்லை; ஆனால் ஈரானுக்கு காலம் கடந்து கொண்டிருக்கிறது” என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் எச்சரிக்கை

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஹிஸ்புல்லாவிற்கான நிதியுதவியை ஈரான் நிறுத்த வேண்டும். அது கட்டாயம். ஹார்முஸ் ஜலசந்தியில் நமக்கு கட்டுப்பாடு உள்ளது. 3 நாட்களுக்கு முன்பே அவர்கள் அதைத் திறந்திருப்பார்கள். அவர்களே நம்மிடம் வந்து, நாங்கள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஒப்புக்கொள்கிறோம் என்று கூறினார்கள்.

என்னைத் தவிர, எனது குழுவில் இருந்த மற்ற அனைவரும் இதனால் மகிழ்ச்சியடைந்தனர். அப்போது நான், ஒரு நிமிடம் பொறுங்கள்; நாம் இதற்கு ஒப்புக்கொண்டால், அதன் மூலம் அவர்கள் தினமும் 50 கோடி டாலர் வருமானம் ஈட்டுவார்கள் என்றேன். இந்தப் பிரச்னையை அவர்கள் முழுமையாகத் தீர்க்கும் வரை, அவர்கள் தினமும் 50 கோடி டாலர் சம்பாதிப்பதை நான் விரும்பவில்லை.

போர் நிறுத்த முயற்சிகள்

கடந்த 6 வாரங்களாக போர் நிறுத்தம் கொண்டு வர செயல்பட்டு கொண்டிருக்கிறேன். ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்கா அவசரப்படவில்லை; ஆனால் காலம் கடந்து கொண்டிருக்கிறது. ஈரானின் ராணுவம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. துப்பாக்கிகளுடன் கூடிய படகுகளை அவர்கள் அங்குமிங்கும் ஓட்டித் திரிகிறார்கள்; அவற்றை நாங்கள் காணும்போது, ​​அவற்றையும் அழித்துவிடுவோம்.

ஈரானின் கடற்படையும், விமானப்படையும் இல்லாமல் போய்விட்டன. அவர்களின் வான்வழித் தடுப்பு அமைப்புகளும் அழிந்துவிட்டன. அவர்களின் தலைவர்கள் அனைவரும் இல்லாமல் போய்விட்டனர். இந்தப் பிரச்சினையின் ஒரு பகுதி என்னவென்றால், அவர்கள் தங்கள் தலைமைத்துவத்தை இழந்துவிட்டார்கள்; மேலும் அவர்கள் பூனைகளும் நாய்களும் சண்டையிடுவது போலத் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக்கொள்கிறார்கள். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

#டிரம்ப் #ஈரான் #அமெரிக்கா #ஹார்முஸ் ஜலசந்தி #ஹிஸ்புல்லா #வெள்ளை மாளிகை #காலம் கடந்து கொண்டிருக்கிறது #ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *