பெரம்பலூர்: விசிக தலைவர் திருமாவளவன், அரியலூர் மாவட்டம் அங்கனூர் ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக கூட்டணி வெற்றி குறித்த நம்பிக்கை
திருமாவளவன் கூறுகையில், “தமிழ் மண்ணில் மதவாத வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை என்பதை மக்கள் தீர்ப்பாக எழுத உள்ளனர். இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு இடையேயான யுத்தம் அல்ல; இரண்டு கருத்தியல்களுக்கு எதிரான யுத்தம். அந்த யுத்தத்தில் தமிழகம் வெல்லும்” என்றார்.
“மீண்டும் ஸ்டாலின் முன் மாதிரி ஆட்சி அமையும். சமூக நீதி தலைத்தோங்கும். ஐந்து ஆண்டுகளில், தமிழக அரசு பெண்களை மையப்படுத்தி மேம்படுத்த புதுமைப் பெண், உரிமைத்தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது” என்று திருமாவளவன் புகழாரம் சூட்டினார்.
நடிகர் விஜய் மீது கடும் விமர்சனம்
நடிகர் விஜய் திமுக வெறுப்பை மட்டுமே மூலதனமாக்கி, திமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற பரப்புரையை மேற்கொண்டதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டினார். “அவருடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், கொள்கை கோட்பாடுகள் குறித்தும் அவர் ஒரு நாளும் பேசியதில்லை. அவர் வெளிப்படுத்திய திமுக வெறுப்பு உள்நோக்கம் கொண்டது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்” என்றார்.
திமுக ஆட்சியின் சாதனைகள்
ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் தமிழகம் இந்தியாவில் முதல் மாநிலம் என்ற எல்லையை தொட்டதாக திருமாவளவன் சுட்டிக்காட்டினார். “பொருளாதாரத்தில் 11.9% உள்ளூர் உற்பத்தி சதவீதத்தை உயர்த்தியுள்ளோம். அப்படிப்பட்ட வளர்ச்சியை மேலும் உறுதிப்படுத்துவோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். தொலைநோக்கு பார்வை அவருக்கு உள்ளது” என்றார்.
விசிகவின் உறுதுணை
“அடுத்த ஆட்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக, அனைத்து துறைகளிலும் முன்னேற பாடுபடுவார். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்று திருமாவளவன் உறுதி அளித்தார். திமுக கூட்டணி வெற்றி பெற்றால், அதற்கு விசிக முழு ஆதரவு அளிக்கும் என்பதை தெளிவுபடுத்தினார்.
