கோடை காலத்தின் தீவிர வெப்பம் காரணமாக பொதுமக்களிடையே உடல்நல பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், உடல் வெப்பத்தை குறைக்க மருத்துவர் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்வது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுவாக மனித உடலின் சராசரி வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் ஆகும். வெயிலின் தாக்கத்தால் இந்த வெப்பநிலை அதிகரிக்கும் போது தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. இத்தகைய சூழலில் உடல் வெப்பத்தைத் தணிக்க பலர் சுயமாக பாராசிட்டமால் அல்லது ஆஸ்பிரின் போன்ற காய்ச்சல் மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர்.
மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள்
வெயிலின் தீவிரத்தால் ஏற்படும் உடல் வெப்பத்திற்கு இத்தகைய மருந்துகளை உட்கொள்வது எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, மருத்துவரின் பரிந்துரை இன்றி இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாடு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், இது ரத்த அழுத்த குறைபாடு உள்ளிட்ட தீவிர பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
இது குறித்து பொது சுகாதார நிபுணர் குழந்தைசாமி விளக்கம் அளித்துள்ளார். “பொதுவாக மக்கள் சுயமாக மருந்து எடுத்துக்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பாராசிட்டமால் போன்ற மருந்துகள் கிருமிகளால் ஏற்படும் காய்ச்சலுக்கு மட்டுமே பலனளிக்கும். வெயில் வெப்பத்தால் உடல் சூடாகும் போது இவற்றை எடுத்துக்கொள்வது ஆபத்தானது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெயில் பாதிப்பிலிருந்து மீள வழிமுறைகள்
வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான முதலுதவி முறைகளை சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக குளிர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். நீரில் நனைத்த துணியால் உடலைத் துடைத்து, விசிறி விடுவதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.
உடல் நீர்ச்சத்தை பராமரிக்க இளநீர், மோர் மற்றும் குளிர்ந்த நீரை அதிக அளவில் பருகக் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அவரை நிழலான இடத்தில் அமர வைப்பது அவசியம். ஒருவேளை நபர் மயக்க நிலையில் இருந்தால், தாமதமின்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
