சென்னை கிண்டி மக்கள் மாளிகையில் இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் 23 புதிய அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக, அமைச்சர்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இளம் தலைமுறையின் வருகை
தமிழக அமைச்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இளம் அமைச்சர்கள் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “இன்றைய நவீன தலைமுறையினர் அரசியலில் நுழைந்துள்ளனர். அவர்கள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக ஆட்சி நிர்வாகத்தை கையாண்டு பழகப்போகிறார்கள். இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்” என்று குறிப்பிட்டார்.
மேலும், ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் குரல்கள் தமிழக அமைச்சரவையில் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு மிகப்பெரிய சமூக மாற்றமாகும் என்றும், இந்த ஆக்கப்பூர்வமான மாற்றங்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தொலைநோக்கு பார்வை மற்றும் திட்டமிடலே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த விளக்கம்
பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்திற்குப் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்து அரசு நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடமே பெறும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
