மத்திய இடைக்காலக் கல்வி வாரியத்தின் (CBSE) 12-ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்துவதில் பயன்படுத்தப்பட்ட ஆன்லைன் முறையில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதை அந்த வாரியம் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. விடைத்தாள்களை இணையவழியில் திருத்தி மதிப்பெண்களை வழங்கும் ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ (OSM) முறையில் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்ததாகப் புகார்கள் எழுந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு குறைபாடு குறித்த குற்றச்சாட்டுகள்
இந்த விவகாரத்தில், விடைத்தாள்களைச் சேமித்து வைக்கும் அமேசான் கிளவுட் ஸ்டோரேஜ் (Amazon Cloud Storage) அமைப்பில் பாதுகாப்பு ஓட்டைகள் இருப்பதாக 19 வயது இளைஞரான நிசர்கா அதிகாரி என்பவர் ஆதாரங்களுடன் குற்றம்சாட்டினார். இதன் மூலம் தரவுகள் கசிந்துள்ளதாகக் கூறப்பட்டது.
மேலும், டெல்லியைச் சேர்ந்த வேதாந்தா என்ற மாணவர், தனது தேர்வு மதிப்பெண்களில் சந்தேகம் கொண்டு விடைத்தாளினை விண்ணப்பித்து பெற்றபோது, அதில் இருந்த கையெழுத்து தனதுதல்ல என்றும், அது தனது விடைத்தாளே அல்ல என்றும் புகார் அளித்திருந்தார். இத்தகைய தனிப்பட்ட புகார்கள் மற்றும் தொழில்நுட்பக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிபிஎஸ்இ வாரியம் உள்விசாரணையை மேற்கொண்டது.
வாரியத்தின் விளக்கம் மற்றும் நடவடிக்கை
நடத்தின உள்விசாரணையில், OSM முறையில் சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதை சிபிஎஸ்இ வாரியம் உறுதி செய்துள்ளது. இந்தத் தரவுப் பாதுகாப்புப் பிழைகளைச் சரிசெய்வதற்காக, கடந்த சில நாட்களாக மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகங்களின் (IIT) சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அடங்கிய குழு தீவிரமாகப் பணியாற்றியதாக வாரியம் தெரிவித்துள்ளது.
தற்போது கண்டறியப்பட்டுள்ள அனைத்து தொழில்நுட்பக் குறைபாடுகளும் முழுமையாகச் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், அதேபோல் அந்த அமைப்பில் வேறு ஏதேனும் பாதுகாப்புப் பிழைகள் இருந்தால் அவற்றை முற்றிலுமாக நீக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வாரியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

