தமிழ்நாட்டின் ஆன்மீக மையங்களில் ஒன்றான சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதியில், ஆண்டுதோறும் ஆவணி, தை மற்றும் வைகாசி ஆகிய மாதங்களில் நடைபெறும் சிறப்புத் திருவிழாக்களில், இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
இந்தத் திருவிழா ஜூன் 1-ம் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெற உள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த விழாவினை முன்னிட்டு தமிழக ஆளுநர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்த பதிவை ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
சமத்துவக் கொள்கைகளும் அய்யாவின் அவதாரமும்
ஆளுநரின் பதிவில், அய்யா வைகுண்டரின் அவதார நோக்கம் மற்றும் அவர் விதைத்த சமத்துவக் கொள்கைகள் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. கலியுகத் தீமைகளை அழித்து தர்மயுகத்தை மலரச் செய்வதற்காக, திருச்செந்தூர் திருப்பாற்கடலில் அய்யா வைகுண்டராக அவதரித்த பரம்பொருள் நாராயணம், சாமிதோப்பு பகுதியில் தங்கி தவம் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஜாதி கொடுமைகளை ஒழிப்பதற்கும், பெண்களின் அடிமைத்தனத்தை மாற்றி அவர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்கும் அய்யா மேற்கொண்ட தீவிர முயற்சிகள் மற்றும் தவத்தின் முக்கியத்துவத்தை ஆளுநர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முத்திரி கிணறு மற்றும் அகிலத்திரட்டு அம்மானை
மக்களிடையே நிலவிய சாதிய மற்றும் சமூக வேறுபாடுகளைக் களைந்து, அனைவரும் சமம் என்ற உணர்வை ஏற்படுத்த சாமிதோப்பில் ‘முத்திரி கிணறு’ உருவாக்கப்பட்டது. இதன் மூலம் மக்கள் அனைவரும் ஒரே கிணற்றில் குளித்து, குடிப்பதன் மூலம் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், அன்பால் உலகை ஆள வேண்டும் என்ற நோக்கத்தில், அரிகோபாலன் சீடர் மூலம் ‘அகிலத்திரட்டு அம்மானை’ என்னும் ஆகமத்தை அருளிய செய்தியும் இதில் இடம்பெற்றுள்ளது.
வைகுண்ட ஏகன நாள்
மனித நேயத்திற்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் அவதாரம் எடுத்த அய்யா வைகுண்டர், 1026-ஆம் ஆண்டு வைகாசி மாதம் 21-ம் தேதி திங்கட்கிழமை மதியம் 12 மணி அளவில் வைகுண்டம் ஏகினார். இந்த புனித நாளை நினைவு கூறும் விதமாகவே சாமிதோப்பு பதியில் வைகாசி தேர் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளை முன்னிட்டு ஆளுநர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

