மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 29) நடைபெறுகிறது. இதையடுத்து அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இறுதி கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி பராக்பூரில் நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசினார்.
பிரதமர் மோடி பேச்சு
“நான் தென் இந்தியாவில் உள்ள பல கோவில்களுக்கு சென்று தெய்வங்களின் ஆசிர்வாதங்களை பெற்றேன். இந்த தேர்தலிலும் காளி கோவிலுக்கு செல்லும்போது அதே அனுபவத்தை உணர்ந்தேன்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
“காளி தேவி எனக்கு புதிய சக்தியை கொடுத்துள்ளார். மேற்கு வங்காள மக்கள் மீது நான் ஆழ்ந்த பற்றுக் கொண்டுள்ளேன். நீங்கள்தான் என் குடும்பம்” என்று பேசினார்.
கடந்த 40 ஆண்டுகளாக நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் பயணம் செய்துவருவதாகவும், பா.ஜ.க.வில் இணைந்த பிறகு ஒரு தொண்டராக கட்சி சொல்வதை எல்லாம் செய்திருப்பதாகவும் கூறினார்.
ஒடிசா, பீகாரை தொடர்ந்து வங்காளத்திலும் தாமரை
“ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலையிலேயே என்னை வாழ்த்துவதற்காக திரண்டு வந்திருப்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. ஒடிசா மற்றும் பீகாரை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் இந்த முறை தாமரை மலரும்” என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
மே 4-ந்தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பா.ஜனதா ஆட்சி பதவி ஏற்பு விழாவில் நிச்சயமாக கலந்துகொள்வேன் என்ற முழுநம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் மீது விமர்சனம்
“மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை திரிணாமுல் காங்கிரசிடம் இல்லை” என பிரதமர் மோடி சாடினார்.
“அவதூறுகளை வீசுவது, மிரட்டல் விடுப்பது, பொய்களை பரப்புவது மட்டுமே திரிணாமுல் காங்கிரசின் ஒரே யுக்தியாக உள்ளது” என்றும் குற்றம் சாட்டினார்.
ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவை ரத்து செய்ததன் மூலம் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தீர்மானங்களில் ஒன்றை பா.ஜ.க. நிறைவேற்றியுள்ளதாக கூறினார். மேற்கு வங்காளத்தில் அமைய உள்ள புதிய அரசு மாநிலத்தின் செழிப்பு குறித்த அவரது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் என்றார்.
வேலைவாய்ப்பில் முன்னுரிமை
“வேலைவாய்ப்பின்மை காரணமாக மேற்கு வங்காளம் பல வருடங்களாக இடம்பெயர்வு துயர்வை சந்தித்தது. எனவே இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதே பா.ஜனதா அரசின் முன்னுரிமையாக இருக்கும்” என பிரதமர் உறுதியளித்தார்.
முதல் கட்ட தேர்தலில் மேற்கு வங்காள வரலாற்றிலேயே இல்லாத வகையில் அதிகபட்சமாக 93.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 3.36 கோடி வாக்காளர்களுக்கு மேல் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியிருந்தனர்.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு
மேற்கு வங்காளத்தில் மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான இரண்டாம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (29-ந்தேதி) நடைபெறுகிறது. 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.








