கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயலுக்கு எதிராக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
சமூகத்தின் மனிதநேயம் கேள்விக்குறியாகியுள்ளது
இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, சூலூர் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கடத்திச் சென்று கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, உடலைக் குளக்கரையில் வீசிச் சென்றதாக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் மிகுந்த மனவலியை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாகவும், இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்லாமல், நமது சமூகத்தின் அடிப்படை மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கும் அவலநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.
முதல்வருக்குக் கோரிக்கை
இந்தக் கொடூரமான செயலில் ஈடுபட்டவர்களை மிருகத்தனம் கொண்டவர்கள் என்று குறிப்பிட்ட டிடிவி தினகரன், அவர்களைக் கைது செய்து மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, அதற்கான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்மைச்சர் ஜோசப் விஜயியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
