வாழ்க்கையில் எதிர்பாராத இழப்புகள் ஒரு மனிதனை மனரீதியாக எவ்வளவு பாதிக்கும் என்பதையும், அதே நேரத்தில் கல்வியின் மீதான தீராத ஆவல் எப்படி ஒருவரை மீட்டெடுக்கும் என்பதையும் விளக்குகிறது திருப்பத்தூரைச் சேர்ந்த அருண் கனகராஜின் வாழ்க்கை வரலாறு. அகரம் திட்டத்தின் 2015 ஆம் ஆண்டு மாணவரான அருண், தனது கடந்த கால வலிகளையும், போராட்டங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தொடர் இழப்புகளும் உடைந்துபோன குடும்பமும்
திருப்பத்தூருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் அரசுப் பள்ளியில் பயின்ற அருண், தனது பத்தாவது வயதில் தாயை இழந்தார். ஒரு விபத்தினால் ஏற்பட்ட காயங்களுக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, தாயார் காலமானார். அதனைத் தொடர்ந்து, வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு ஊருக்கு வந்த தந்தையும், சில ஆண்டுகளுக்குப் பிறகு இதே மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் விபத்தினால் உயிரிழந்தார். ஒரே பெட்டில் தனது பெற்றோர் இருவரும் காலமான என்ற கசப்பான உண்மை அருணின் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்தியது.
உறவுகளின் ஆதரவும் அன்றாடப் போராட்டங்களும்
பெற்றோர் மறைவுக்குப் பிறகு, அருணையும் அவரது தங்கையையும் அவர்களின் அக்கா மட்டுமே அரவணைத்துச் சென்றார். உறவினர்களின் உதவியால் அரசுப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தாலும், அன்றாடத் தேவைகளுக்காகக் கடும் உழைப்பை மேற்கொண்டனர். பூந்தோட்டங்களில் பூ பறிப்பது, வாழைத் தோட்டங்களில் உரமிடுவது போன்ற சிறு வேலைகளைச் செய்து, அதற்காகக் கிடைத்த குறைந்தபட்ச ஊதியத்தையும், சில நேரங்களில் வாழைக்காய்களையும் கொண்டு தங்கள் பசியைத் தீர்த்துக் கொண்டனர்.
அக்காவின் கல்விக்காக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் செய்த உதவிகள் மூலம் அவர் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டமும், பின்னர் பி.எட் படிப்பும் முடித்து, மாதம் 3,000 ரூபாய் சம்பளத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். இந்தச் சிறிய வருமானத்தில் மூன்று பிள்ளைகளின் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வது பெரும் சவாலாக இருந்தது.
கல்வியின் மீதான தீராத ஏக்கமும் கண்ணீரும்
தன்னுடைய பன்னிரண்டாம் வகுப்பு படிப்பை முடித்த நிலையில், உயர்கல்விக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் அருணுக்கு அதிகமாக இருந்தது. ஆனால், பொருளாதார நெருக்கடி அந்த கனவைச் சிதைத்தது. ஜன்னல் கூட இல்லாத சிறிய வீட்டில், அக்காவின் புடவையைத் திரையாகக் கட்டி மறைத்துக் கொண்டு வாழ்ந்த அந்த நாட்களை அவர் நினைவு கூர்கையில், “நம்மால் இனி படிக்க முடியாது என்று தினமும் அழுதுகொண்டிருப்பேன்” என்று உருக்கமாகக் கூறுகிறார்.
சமூகத்தின் மாறுபட்ட பார்வைகளும், வறுமையின் கொடுமைகளும் அவரை மனரீதியாகப் பாதித்த நிலையிலும், கல்வி மட்டுமே தனது வாழ்க்கையை மாற்றும் என்ற நம்பிக்கையை அவர் கைவிடவில்லை. பெற்றோரின் ஆதரவின்றி வளர்ந்தாலும், ஒழுக்கமாகவும், விடாமுயற்சியுடனும் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதைத் தனது அனுபவத்தின் மூலம் அவர் உணர்ந்துகொண்டார்.
இறுதியில், அகரம் போன்ற அமைப்புகளின் வழிகாட்டுதலும் ஆதரவும் கிடைத்தால், அருணைப் போன்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி கனவுகள் நனவாகும் என்பதற்கு இவரது வாழ்க்கை ஒரு சான்றாகும்.
