லண்டனின் புகழ்பெற்ற ராயல் சொசைட்டியின் உறுப்பினராக சவுமியா சுவாமிநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், சவுமியா சுவாமிநாதனுக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பெருமை சேர்ப்பதாகவும், இந்திய அறிவுத்திறனுக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கான முன்மாதிரி
இந்த உயரிய விருதினைப் பெறும் இரண்டாவது இந்திய பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையை சவுமியா சுவாமிநாதன் படைத்துள்ளதை முதலமைச்சர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வெற்றி, எதிர்காலத்தில் இன்னும் பல பெண்கள் சமூகத் தடைகளைத் தகர்த்து சாதனை படைக்க பெரும் ஊக்கமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திட்டங்கள் மீதான ஆர்வம்
திராவிட மாடல் அரசின் முதன்மை திட்டங்களில் ஒன்றான காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் சவுமியா சுவாமிநாதன் பங்கேற்றிருந்த நிகழ்வை முதலமைச்சர் நினைவு கூர்ந்தார். அந்த நிகழ்ச்சியில் நமது திட்டங்களைப் பாராட்டி ஆலோசனைகளை வழங்கிய அவருக்கு, தற்போது கிடைத்துள்ள இந்த சர்வதேச அங்கீகாரம் தனிப்பட்ட முறையிலும் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் அடிச்சுவட்டில் சவுமியா சுவாமிநாதன் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருவதாகக் கூறிய முதலமைச்சர், அவரது அறிவுத்திறனும் வழிகாட்டுதலும் மக்களின் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து பயன்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
