தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று (26.04.2026) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்க தலைவராக தமிழ்குமரன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதற்கு பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மானியத்தொகை நிலுவை மற்றும் புதிய ஒப்பந்தம்
சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் மானியத்தொகை கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அந்த மானியத் தொகையினை புதிய அரசு உடனடியாக வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தமிழ்த் திரைப்பட மறுசீரமைப்பு குறித்து தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம், தொகுப்பாளர்கள் சங்கம், தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் புதிய ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Revenue Share முறை மற்றும் அடையாள வேலை நிறுத்தம்
தமிழ் சினிமாவில் OTT மற்றும் சாட்டிலைட் வியாபாரம் சரிந்து வரும் நிலையில், ஆந்திரா மாநிலத்தில் உள்ளதைப் போல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் Revenue Share முறையில் பங்கேற்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. தயாரிப்பாளர்களின் நஷ்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே நடிகர் சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், இனி மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் Revenue Share முறையில் மட்டுமே தயாரிக்கப்படும். இந்த விஷயத்தை சினிமாத்துறை அனைவரின் கவனத்திற்கு கொண்டு சேர்க்க ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும். தொடர்ந்து இதே போக்கை நடிகர் சங்கம் கடைபிடித்தால், தொடர் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
OTT ரிலீஸ் முடிவு மற்றும் தென்னிந்திய ஒருங்கிணைப்பு
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் இணைந்து, திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட 8 வாரங்களுக்கு OTT வெளியிட மாட்டோம் என தயாரிப்பாளர்களை நிர்பந்திப்பதை சங்கம் வன்மையாக கண்டித்தது. இதுகுறித்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து வருகிற 10.05.2026 அன்று கலந்தாய்வு கூட்டம் நடத்தவுள்ளனர். அதில், நான்கு மாநிலங்களிலும் எந்த படங்களையும் வெளியிடாமல் இருக்க முடிவு எடுக்கப்படும். இந்த முடிவுக்கு பொதுக்குழு ஏகமனதாக ஆதரவு தெரிவித்தது. மேலும், சங்கத்திற்கு தெரியாமல் OTT சம்பந்தமாக கடிதம் அளித்தால், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு திரையுலகம் தொழில் ஒத்துழைப்பு வழங்காது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
புதிய முயற்சிகள்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ‘தமிழ் சினிமா செய்திமலர்’ என்ற புத்தகம் வரும் மாதத்திலிருந்து வெளியிடப்படும். சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்து உறுப்பினர்களுக்கும் மாதாமாதம் தெரிவிக்கப்படும். மேலும், சங்கத்தின் YouTube சேனல் ஆரம்பிக்கப்பட்டு, தயாரிப்பாளர்கள் தங்கள் சினிமா விளம்பரங்களை செய்யலாம். இந்த தீர்மானங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளித்து, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
